கொழும்பில் கைது வேட்டை – பாதாள கோஷ்டி தலைவர்கள் மடக்கிப் பிடிப்பு!
கொழும்பு நகரில் பாதாள உலகக் குழுவாக இயங்கி, குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த பிரதான புள்ளிகள் இருவர், சனிக்கிழமை (01) நண்பகல் குருநாகல் வெஹெர பிரதேசத்தில் மறைந்திருந்தபோது, கொழும்பு பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சந்தேக நபர்கள் இருவருடனும், ரி. 56 ரக துப்பாக்கி ஒன்றையும் அப்பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் வீடொன்றை வாடகைக்கு எடுத்து, அதில் தலைமறைவாகியிருந்து வந்துள்ளனர். வெஹெரவிலுள்ள இராணுவ முகாம் மற்றும் ஸ்ரீ லங்கா மக்கள் கட்சியின் தலைவர் அசங்க வனரத்னவின் வீடு என்பவற்றுக்கு அருகிலுள்ள வீடொன்றிலேயே இவர்கள் தலைமறைவாகி இருந்துள்ளதாக, விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை, கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.
( ஐ. ஏ. காதிர் கான் )