நாடாளுமன்றம் கலைப்பு: வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுகிறார் மைத்திரி?
நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்காக தன்னால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என அறியமுடிகின்றது.
நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்காக ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடைஉத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்தான அடுத்தக்கட்ட விசாரணைகள் எதிர்வரும் 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் சட்டமா அதிபர், ஜனாதிபதியின் சார்பில் வாபஸ்பெறும் முடிவை உயர்நீதிமன்றத்தில் அறிவிக்ககூடும் என தெரியவருகின்றது.
அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியால் எடுக்கப்பட்ட முடிவு தவறானது என்றே உயர்நீதிமன்ற தீர்ப்பு அமையும் என சட்ட நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ள நிலையிலேயே, தமது உத்தரவை வாபஸ்பெற மைத்திரி முடிவெடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.