வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை உடடினயாக வழங்குக!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் சம்பந்தமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் கவனத்துக்கு கொண்டு சென்ற இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான முழு நிவாராணங்களையும் உடனடியாக வழங்குமாறு மட்டு. அரசாங்க அதிபருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஏற்பட்டுள்ள இழப்புக்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தற்போது அவசர தேவைகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்குவதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இன்று காலை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் உறுதியளித்தார்.
அந்த அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உதயகுமாரை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அவசரமாக நிவாரணங்களை வழங்குமாறும், ஏற்பட்டுள்ள இழப்புக்கள் சம்பந்தமான அறிக்கையினை தனக்கு வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கேட்டுள்ளார். அத்துடன், மீட்புப் பணிகளுக்காக பொலிஸ், இராணுவம் மற்றும் விமானப்படையினரின் உதவிகளை பெருமாறும் தெரிவித்தார்.
உள்ளுராட்சி உறுப்பினர்கள் தங்களது பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மற்றும் தேவைப்பாடுகள் சம்பந்தமான தகவல்களை கிராம உத்தியோகத்தர் ஊடாக பிரதேச செயலாளருக்கு அனுப்பி அந்த மக்களுக்கு தேவையான சகல வசதிகளையும் பெற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்யுமாறும், அது சம்பந்தமான அறிக்கைகளை தனக்கும் வட்சப் மூலம் அனுப்பி வைக்கும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்.