மைத்திரியின் துரோகத்துக்கு ஐ.தே.க. பதிலடி – ‘வீதி வீதியாக மைத்திரி வேடத்தில் அப்பம் விநியோகம்’!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவாகவும் கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட வாகனப் பேரணியின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போன்று வேடமணிந்தவர் மக்களுக்கு அப்பம் வழங்கினார்.
முட்டை அப்பம் சாப்பிட்டகையோடு பொதுவேட்பாளராகக் களமிறங்கி மஹிந்தவுக்கு துரோகம் செய்த மைத்திரிபால சிறிசேன தற்போது ரணிலுக்கும் துரோகம் செய்துவிட்டார். அவரின் துரோகத்தை வெளிப்படுத்தும் வகையில் அப்பம் வழங்கப்பட்டது என்று ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
காலி முகத்திடலில் இருந்து சுதந்திர சதுக்கம் வரை வாகனப் பேரணி சென்றது. அதில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்களும், அதன் பங்காளிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.பேரணியின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்குச் சுடச் சுட அப்பங்கள் வழங்கப்பட்டன.
ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பியான முஜிபூர் ரஹ்மானால் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.