தமிழரசுக் கட்சியிலிருந்து விக்னேஸ்வரன் விலகல்! – மாவைக்குக் கடிதம் மூலம் அறிவிப்பு

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து விலகுவதாகக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

புதிய கட்சியை ஆரம்பித்திருப்பதால் அவர் தாமாகவே கட்சியிலிருந்து விலகியதாகவே கருதப்படுவார் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

நீதியரசாராக இருந்த விக்னேஸ்வரன் கடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராகக் கொண்டுவரப்பட்டார்.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அனைத்தும் இணைந்து அவரைக் கொண்டு வந்தன. அவர் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து மாகாண சபையின் ஐந்து வருட ஆட்சிக் காலத்தின் இடையில் விக்னேஸ்வரனுக்கும் கூட்டமைப்புக்கும் இடையே குறிப்பாகத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்குமிடையே முரண்பாடுகள் வலுவடைந்தன.

இந்நிலையில், மாகாண சபையின் காலம் முடிவடைவதற்கு முன்னர் தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சியொன்றை அமைத்தார் விக்னேஸ்வரன்.

அந்தக் கட்சியை ஆரம்பிக்க உள்ளதாக அறிவிப்பதற்கு முன்னர் தமிழரசுக் கட்சியிலிருந்து விலகுவதாக அந்தக் கட்சியின் தலைவர் மற்றும் கூட்டமைப்பின் தலைவர் ஆகியோருக்கு விக்னேஸ்வரன் கடிதமொன்றையும் அனுப்பி வைத்திருக்கிறார்.

அந்தக் கடிதத்தில், தன்னை அரசியலுக்குக் கொண்டு வந்தமைக்கு நன்றி தெரிவித்திருக்கும் விக்னேஸ்வரன், தன்னைக் கட்சி உறுப்பினராகப் பார்க்காது தனக்கு எதிரான செயற்பாடுகளே மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆகையினால் தான் அந்தக் கட்சியில் இருந்து உத்தியோகபூர்வமாக விலகிக் கொள்வதாகவும் அறிவித்திருக்கின்றார்.

இவ்விடயம் தொடர்பில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் கேட்டபோது,

“வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் விக்கினேஸ்வரன் போட்டியிட்டிருந்தார். அவர் தற்போது கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கின்றார். ஆனால், அவர் அண்மையில் ஒரு புதிய கட்சியொன்றையும் ஆரம்பித்திருந்தார். அவ்வாறு கட்சி ஆரம்பித்ததனூடாக அவர் தாமாகவே கட்சியிலிருந்து விலகியதாகக் கருதப்படுவார். அவ்வாறு புதிய கட்சியை ஆரம்பித்த விக்னேஸ்வரன் மீதோ அல்லது அவருடையசெயற்பாடுகள் மீதுதோ எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஆகவே, அவர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து புதிய கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில் அவர் தாமாகவே கட்சியிலிருந்து விலக்கப்படுகின்றார்” – என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *