நிகழ்நிலை காப்பு சட்டமூலம் நிறைவேற்றம்!
நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு பாராளுமன்றத்தல் இன்று மாலை நிறைவேற்றப்பட்டது.
எனினும், குழுநிலை சந்தர்ப்பத்தில் சட்டமூலத்தில் பல்வேறு திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன.
சமூக ஊடகங்கள் உள்ளிட்ட ஒன்லைன் செயற்பாடுகளில் தாக்கம் செலுத்தும் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய, நேற்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இன்றும் விவாதம் தொடர்ந்த நிலையில், சட்டமூலத்திற்கு முழுமையாக ஆதரவு வழங்குவதாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் இதன்போது தெரிவித்தனர்.
எனினும், தாம் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த சட்டமூலத்தை முழுமையாக மாற்றுவதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.
இந்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேதமாச தெரிவித்தார்.
சமூக ஊடகங்கள் இல்லையெனில், அரச சொத்துகள் தவறாக பயன்படுத்தப்பட்டமை, நாட்டை வங்குரோத்து அடையச்செய்தோர் அண்மையில் படகில் களியாட்ட நிகழ்வில் ஈடுபட்டமை தொடர்பில் தகவல்கள் வௌியாகியிருக்காது எனவும் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டினார்.
நேற்றும் இன்றும் நடைபெற்ற விவாதத்தை தொடர்ந்து, நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெற்றது.
இதன்போது, சட்டமூலத்திற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
பின்னர் குழுநிலை விவாதத்தின்போது பல்வேறு சரத்துகளை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
36 ஆவது சரத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி முன்வைத்த திருத்தங்கள் தொடர்பிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
எவ்வாறாயினும், இந்த திருத்தத்திற்கு எதிராக பெரும்பான்மையான உறுப்பினர்கள் வாக்களித்ததால் ஆளும் தரப்பு முன்வைத்த திருத்தத்துடன் அது நிறைவேற்றப்பட்டது.