முன்வைத்த காலை ஒருபோதும் பின்வைக்கமாட்டேன்! 113 எம்.பிக்களின் ஆதரவைப் பெற்றுவிட்டோம்!! – மைத்திரி முழக்கம்
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 113 எம்.பிக்களின் ஆதரவைப் பெற்று விட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
புதிய அரசுக்கு ஆதரவு வழங்கும் விதத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் தற்போது நடைபெற்று வரும் ´மக்கள் மகிமை´ ஆர்ப்பாட்டப் பேரணியில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“முன்வைத்த காலை நான் ஒருபோதும் பின்வைக்கமாட்டேன்.
கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு பிரதமர் பதவியை ஏற்கொள்ள அழைப்பு விடுத்திருந்தேன். அவர்கள் அதனை நிராகரித்தனர்.
ரணில் விக்கிரமசிங்கவுடன் கடமையாற்ற முடியாமல் போனதால் மிகவும் தகுதி வாய்ந்த ஒருவரான மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தேன்.
கடந்த தினங்களில் நாட்டுக்குத் தேவையான தீர்மானங்களை மேற்கொண்டது ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ இல்லை. ரணில் விக்கிரமசிங்கவை சுற்றி இருந்த சிலரே தீர்மானங்களை மேற்கொண்டனர். இதுதான் உண்மை” – என்றார்.