புதிய அரசை எவராலும் உடைக்கவே முடியாது! – மஹிந்த சூளுரை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எடுக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்திற்கு மீண்டும் ஒருமுறை மரியாதை செலுத்துவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மைத்திரி – மஹிந்த தலைமையிலான புதிய அரசுக்கு ஆதரவு வழங்கும் வகையில் ´மக்கள் மகிமை´ ஆர்ப்பாட்டப் பேரணி தற்போது நாடாளுமன்ற வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“மூன்று வருடங்கள் ரணில் விக்கிரமசிங்கவுடன் கடமையாற்றியதன் பின்னரே ஜனாதிபதி இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை எடுத்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கடமையாற்றுவது இலகுவான ஒரு விடயம். நாட்டின் எதிர்கால குழந்தைகளின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே ஜனாதிபதி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார்.
நாட்டின் எதிர்கால நலனுக்காகவே நானும் கடமையாற்றப் போகின்றேன்.
பலரது அர்ப்பணிப்புடன் அமைக்கப்பட்டுள்ள தற்போதைய அரசை எக்காரணத்துக்காகவும் யார் நினைத்தாலும் பிரிக்கவே முடியாது” – என்று குறிப்பிட்டுள்ளார்.