நல்லாட்சி மீதான நம்பிக்கை நாளுக்கு நாள் குறைகின்றது! – சிறிதரன் எம்.பி. சுட்டிக்காட்டு
தமிழ் மக்களுக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கும் இந்த நல்லாட்சி மீதான நம்பிக்கை நாளுக்கு நாள் குறைவடைந்து செல்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு, நேற்று நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையின் மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“இந்த நாட்டில் தமிழ் மக்கள் படும் இன்னல்கள், துன்பங்களுக்கு இந்த அரசு பொறுப்பெடுத்த காலத்தில் இருந்து தமக்கான மாற்றம் வரும், நீதி கிடைக்கும், அனைத்து விடயங்களிலும் முன்னேற்றம் காணப்படும் என நம்பிய மக்களிடம் இருந்து நல்லாட்சி மீதான நம்பிக்கை குறைவடைந்து வருகின்றது.
ஆகவே, அரசு அரசியல் கைதிகள் விடயத்தை ஒரு மனிதாபிமானக் கண்ணோட்டத்துடன் அணுகி அவர்களுக்கான மன்னிப்பையோ அல்லது புனர்வாழ்வையோ பெற்றுக்கொடுக்க வேண்டும்.
இந்த நாட்டில் பாரிய குற்றங்களை செய்தவர்கள் எல்லாம் வெளியில் இருக்கின்றார்கள். ஆனால், குற்றச்சாட்டுடன் தொடர்புடையதாகச் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் சிறையில் இருகின்றனர்” – என்றார்.