சர்வதேசத்தின் தலையீடு இலங்கைக்கு வேண்டாம்! – லண்டனில் தெரிவித்தார் பிரதமர் ரணில்
போர்க்கால மீறல்களுக்கு பொறுப்புக்கூறும் செயல்முறைகளில் சர்வதேசத்தின் தலையீடு அவசியமில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க லண்டனில் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை ஒக்போர்ட் யூனியனில் சிறப்புரை ஒன்றை நிகழ்த்தினார். இதன்போதே, விசாரணைகளில் சர்வதேச தலையீட்டுக்கு எதிராக அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இப்போதைய சூழ்நிலையில், விசாரணைகளில் வெளிநாட்டுத் தலையீடுகளின் தேவையை நாங்கள் உணரவில்லை என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்த உரையின்போது, இலங்கையில் தொடரும் சித்திரவதைகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு ரணில் விக்கிரமசிங்க பதிலளிக்காமல் நழுவினார் என்றும், வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்கள் இராணுவத்தின் இருப்பை விரும்புவதாக கூறினார் என்றும் ஊடகவியலாளர் பிரான்சிஸ் ஹரிசன் கீச்சகப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ஒக்ஸ்போர்ட் யூனியனில் நேற்று மாலை பிரதமர் ரணில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அவருக்கு எதிராக ஒக்ஸ்போர்ட் யூனியன் கட்டடத்துக்கு வெளியே புலம்பெயர் தமிழர்களால் போராட்டம் ஒன்றும் நடத்தப்பட்டது.