மட்டக்களப்பில் ஒன்றரை வயது மகளை அடித்துக் கொலைசெய்த கொடூர தந்தை!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் தந்தையின் தாக்குதலில் படுகாயமடைந்த ஒன்றரை வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

இந்தச் சம்பவத்தையடுத்து தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கடுக்காமுனை, அருள்நேசபுரத்தைச் சேர்ந்த திலீபன் யதுநிசா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது:-

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பெரியதம்பி திலீபன் சம்பவ தினமான கடந்த 4ஆம் திகதி மாலை மனைவியுடன் ஏற்பட்ட சண்டையையடுத்து வீட்டில் இருந்த குறடு ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு மனைவியைத் தாக்க முற்பட்டார். இதன்போது மனைவி திடீரென தனது கையில் குழந்தையைத் தூக்கியபோது குறடு குழந்தையின் தலையில் தாக்கப்பட்டதையடுத்து குழந்தை படுகாயமடைந்தார். இதையடுத்து தந்தை தப்பியோடி விட்டார்.

படுகாயமடைந்த குழந்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றுமுன்தினம் 8ஆம் திகதி திங்கட்கிழமை பகல் உயிரிழந்துள்ளது.

இதன்பின்னர் தலைமறைவாகியிருந்த தந்தையைப் பொலிஸார் கைதுசெய்தனர்.

சம்பவம் தொடர்பான விசாரணையை கொக்கட்டிச்சோலைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *