வரலட்சுமியின் படப்பிடிப்பில் பயங்கரத் தீ; 5 வயது சிறுமியும் தாயும் உடல் கருகிப் பலி!
மாரி – 2 படத்திற்கு அடுத்ததாக வெல்வெட் நகரம், நீயா – 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார். மேலும் கன்னட மொழியிலும் ரணம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
வி.சமுத்ரா என்பவர் இயக்கிவரும் இப்படத்தில் சி.பி.ஐ. அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் வரலட்சுமி. இந்நிலையில் இப்படத்தின் சண்டைக்காட்சி ஒன்று பெங்களூருக்கு அருகிலுள்ள பாகலூரில் படமாக்கப்பட்டது.
அக்காட்சியில் இரண்டு கார்கள் மோதி தீப்பிடிப்பது போன்று காட்சியமைக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் அருகில் வைத்திருந்த கேஸ் சிலிண்டரில் தீப்பற்றி வெடித்து சிதறியது.
அதனால் வேடிக்கை பார்க்க வந்த ஐந்து வயது சிறுமியும் அவரது தாயாரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தப் பகுதியில் படப்பிடிப்பு நடத்த பொலிஸாரிடம் முன் அனுமதி பெறவில்லை என்றும் கூறப்படுகின்றது.