இறுதி வாக்கெடுப்பில் பட்ஜட்டை எதிர்ப்போம்! – சு.க. கூறுகின்றது
வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பில் அதற்கு எதிராகவே வாக்களிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த அரசியல் குழப்ப நிலையின்போது மஹிந்தவைப் பிரதமராக்கி, மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் இல்லாமல் ஆட்சி அமைக்க முற்பட்டமை மூடத்தனமானதாகும்.
அந்தத் தீர்மானத்தில் சந்தேகம் காணப்பட்டது. என்றாலும் ஆட்சி கலைக்கப்பட்டது. அது தவறு என உயர்நீதிமன்றம் அறிவித்தது. இதனால் எமது கட்சியில் சிறிய பின்னடைவு ஏற்பட்டமை உண்மையாகும்.
இந்த வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கவே நாம் தீர்மானித்திருந்தோம். இறுதியில் வரவு – செலவுத் திட்ட வாக்களிப்பில் கலந்துகொள்ளாது விலகியிருக்கத் தீர்மானித்தோம். எனினும், அதிலும் குறைபாடுகள் உள்ளன.
ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதி வாக்கெடுப்பில் ரணில் அரசின் வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராகவே நாம் வாக்களிப்போம்” – என்றார்.