இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 3 டிரில்லியன்களை எட்டிய வருமான வரி!
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக 3 டிரில்லியன் வரி வருமானத்தினை எட்டிய ஆண்டாக 2023 ஆம் ஆண்டு சாதனை படைத்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் பொருளாதார அபிவிருத்தி ஸ்திரப்படுத்தல் பிரிவின் பணிப்பாளர் டபிள்யூ.எம்.ஜி. குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட வரவுசெலவுத் திட்டத்திற்குப் பிந்தைய விசேட அமர்வில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 17) நிலவரப்படி அரசாங்கம் இதுவரை 2,394 பில்லியன் ரூபாய் வரி வருமானத்தினை ஈட்டியுள்ளது.
இந்த ஆண்டின் முடிவுக்கு இன்னும் சிறிது காலமே மீதமிருப்பதால் வரி வருமானம் நிச்சயம் 3,000 பில்லியனை எட்டும்.
இன்றுவரை அரசாங்கத்திற்கு சிறந்த மானத்தை ஈட்டித் தரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இவ்வருடம் 1,415 பில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியுள்ளது, இது மொத்த வரி வருமானத்தில் 84 சதவீதமாகும்.” என்றார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வழிகாட்டுதல்களின் படி உருவாக்கப்பட்ட புதிய வரிக்கொள்கை மற்றும் முறையான அரசாங்க மேற்பார்வை போன்றவையே இந்த இலக்கை அடைவதற்கான முக்கிய பங்கு எனவும் அவர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.