காஸாவில் குண்டுவீச்சுக்கு நடுவே குழந்தையை பெற்றெடுத்த பெண் செய்தியாளர்
ஜுமானா எமட் காஸாவில் செய்தியாளராகப் பணியாற்றி வருகிறார். ஒன்பது மாதம் கர்ப்பமாக இருந்த அவர் எப்போது வேண்டுமானாலும் குழந்தையைப் பிரசவிக்கலாம் என்ற சூழலில் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலின் காரணமாக காஸா நகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு ஜுமானாவின் குடும்பத்தினர் தாங்கள் தங்கியிருந்த பகுதியில் இருந்து இடம்பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டது.
பிரசவத்திற்காக அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு அருகில் இருந்த கட்டடம் வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளானது.
இது குறித்து அவர் கூறும்போது, “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எங்களுக்கு அருகில் இருந்த வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டது. அந்த சத்தம் என்னை நடுங்கச் செய்தது. மருத்துவமனையும் தாக்குதலுக்கு உள்ளாகிவிட்டது என்று நினைத்தோம்.
திடீரென மருத்துவமனையில் அனைத்துமே தலைகீழாக மாறியது. எங்கும் சடலங்களும் காயமடைந்தவர்களின் கூக்குரலும், கதறலுமாக இருந்தது. பிரசவ வலி, குண்டுவீச்சு குறித்து சொல்லத் தேவையே இல்லை. எந்தச் சூழலாக இருந்தாலும் குழந்தையைப் பெற்றெடுத்தே தீர வேண்டும் என்பதை மட்டுமே நினைத்துக்கொண்டு இருந்தேன்,” என்றார்.