காஸா மீதான முக்கியமான ஐ.நா தீர்மானத்தில் வாக்களிக்காத இந்தியா

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.

காஸாவில் பொதுமக்களின் பாதுகாப்பு, அங்கு சட்ட மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்வதற்கு ஆதரவாக இந்தத் தீர்மானம் அமைந்திருந்தது. ஆனால் இந்தியா இந்த வாக்கெடுப்பில் இருந்து விலகி இருந்தது.

காஸாவில் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஆதரவாக ஐ.நா. பொதுச் சபை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 27) ஒரு வாக்கெடுப்பு நடத்தியது. இதில் போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 14 வாக்குகளும் பதிவாகின. 45 நாடுகள் வாக்களிக்கவில்லை. இந்தியாவை தவிர, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, இராக், இத்தாலி, ஸ்வீடன், யுக்ரேன், ஜிம்பாப்வே போன்ற நாடுகளும் இதில் பங்கேற்கவில்லை.

அரேபிய குழுவின் சார்பாக ஜோர்டானால் முன்வைக்கப்பட்ட இந்தத் தீர்மானம் பாலத்தீன மற்றும் இஸ்ரேலிய குடிமக்களுக்கு எதிரான அனைத்து வன்முறைச் செயல்களையும் கண்டித்தது.

இந்த வாக்கெடுப்பு சட்டப்பூர்வமாக இஸ்ரேலை பிணைக்காதபோதும் இதன் உலகளாவிய தன்மை காரணமாக தார்மீக எடையைக் கொண்டுள்ளது.

ஆனால் மறுபுறம், ‘ஹமாஸின் தீவிரவாத தாக்குதலைக்’ கண்டித்து கனடாவின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.

எனினும், இந்த வரைவுத் தீர்மானம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாததால் ஐ.நா பொதுச் சபையில் தோல்வியடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *