இந்தியாவிற்கும் மன்னாருக்கும் இடையில் விரைவில் கப்பல் சேவை
இந்தியாவிற்கும் மன்னாருக்கும் இடையில் கடல் போக்குவரத்து சேவையை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விரைவில் தலைமன்னாரில் சேவை ஆரம்பிக்கப்படும் என்றும் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மன்னார் முசலி தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் நேற்று(22) தேசிய மீலாதுன் நபி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் மூலம் எதிர்காலத்தில் மன்னார் அபிவிருத்தி அடையும் என்றும் சூரிய சக்தியை கொண்டு மன்னாரை மேம்படுத்த முடியும் என்றும் கூறினார்.
புத்தளத்திலிருந்து மன்னார் வரை யாழ் குடாநாட்டின் ஊடாக முல்லைத்தீவு வரை பசுமை பொருளாதாரம் மற்றும் பசுமை வலுசக்தி ஆற்றல் உள்ளதாகவும் அதன் மையதாக பூநகரி நகரை உருவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அதிபர் கூறினார்.
மேலும் மன்னாரை சுற்றுலா மையமாக மாற்றுவதுடன் மீன்பிடித் தொழில் வளர்ச்சியடையும் போது மன்னாரும் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடையும் என்றும் தெரிவித்தார்.