நாகப்பட்டினம் – இலங்கைக்கு இடையில் ஒக்டோபரில் கப்பல் சேவை ஆரம்பம்
நாகப்பட்டினம் – இலங்கைக்கு இடையிலான கப்பல் போக்குவரத்து அடுத்தமாதம் முதல் ஆரம்பமாகும் என தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து, 60 கடல் மைல்கள் தொலைவில், இலங்கையிலுள்ள காங்கேசன்துறை துறைமுகத்திற்குக் கப்பல் இயக்குவதற்கான நடவடிக்கைகள் தமிழ்நாடு கடல்சார் திணைக்களம், மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை மற்றும் வெளியுறவுத் துறை மற்றும் தமிழக அரசு இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
நாகப்பட்டினம் துறைமுக கால்வாய் தூர்வாருதல், பயணியர் முனையம் அமைப்பது போன்ற பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
அந்தப் பணிகள் பத்து நாட்களுக்குள் நிறைவுபெற்றுவிடும். அக்டோபர் 15 ஆம் திகதிக்குள் கப்பல் சேவை தொடங்கப்படும்” என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.
இந்தியாவின் சென்னையில் இருந்து காங்கேசன்துறை வரையான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த ஜுன் மாதம் 16 ஆம் திகதியன்று இந்தியாவின் சென்னை துறைமுகத்திலிருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு 100 பயணிகளுடன் இந்திய பயணிகள் கப்பல் வந்தடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.