இளம் பெண் கொலை 5 மாதங்களின் பின் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

அலவத்துகொட, உல்லேகடை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய திருமணமான பெண், ஐந்து மாதங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் 10ஆம் திகதி, பெண் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு, நெல் வயல் ஒன்றில் புதைத்த சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்ட அலவத்துகொட பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அந்தப் பெண்ணின் கணவரை நேற்று கைது செய்துள்ளனர்.

தனுகா மதுவந்தி என்ற 26 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இக்கொலை தொடர்பில் கிடைத்த தடயங்களுக்கமைய, பொலிஸ் உத்தியோகபூர்வ மோப்ப நாயின் உதவியுடன் வீடொன்றில் இருந்த திருமணமான ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இருந்த போதிலும், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு ஏற்பட்ட சந்தேகத்திற்கமைய, மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் உயிரிழந்த பெண்ணின் கணவரை கைது செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் ஆடைகள் அகற்றப்பட்டு உடல் வயலில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. எப்படியிருப்பினும் மரபணு மற்றும் தடயவியல் அறிக்கைகளுக்கமைய, அவர் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

இதனால் விசாரணையை தவறாக வழிநடத்தும் வகையில் அவரது ஆடைகள் கழற்றப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதுதவிர, சம்பவத்தன்று, அருகில் உள்ள மரண வீட்டிற்கு சென்றதாகக் கூறப்படும் சந்தேக நபர் சுமார் ஒரு மணித்தியாலம் காணாமல் போயிருந்த நிலையில், வீட்டின் சமையலறையில் இருந்த மின்விளக்கு எரியாமல் இருந்தது. அத்துடன் சம்பவத்தின் போது வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் குறைக்காமல் இருந்தது.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் வீட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது. அதற்கமைய, கணவர் தொடர்பில் பல சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்து சில மீற்றர் தூரத்தில் தான் நடத்தும் கடையை மூடிவிட்டு முச்சக்கர வண்டியில் வீட்டுக்குச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யச் சென்ற போது அவரது நடத்தையில் காணப்பட்ட மாற்றங்களும் அவரை சந்தேகிக்க வைத்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள உயிரிழந்த பெண்ணின் கணவரான 27 வயதுடைய சந்தேக நபர் இன்று (23.08.2023) கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *