இலங்கையில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க இரவு நேரப் பொருளாதார முறைமை!

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில், இரவு நேர பொருளாதார முறையை (Night Economy ) பின்பற்ற வேண்டும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.

அதிபர் ஊடக மையத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இதனைத் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, ஒருவரின் வாழ்க்கையை சுதந்திரமாக அனுபவிக்க தேவையான வசதிகளை வழங்கும் இடமே சுற்றுலாத் தலமாகும்.

எனவே இரவு 10 மணிக்கு சுற்றுலா தலத்தை மூடினால் சுற்றுலாப் பயணிகள் வருகை தரமாட்டார்கள். இறந்த நகரங்களுக்கு (Death City) சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை.

எனவே, நமது கடற்கரைகளை ரசிக்க வேண்டுமெனில் சுற்றுலாப் பயணிகள், இரவு முழுவதும் கடற்கரையில் தங்க வாய்ப்பளிக்க வேண்டும். அதற்கான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் எமது நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இந்நாட்டில் உள்ள ஒரு சிலரால் ஏற்படும் மோசமான விடயங்கள் முழு சுற்றுலாத்துறையையும் பாதிக்கிறது.

அது மட்டுமன்றி பாதிக்கப்பட்டவர்கள் தமது நாட்டுக்கு திரும்பிச் சென்று இது தொடர்பில் வெளியிடும் கருத்துக்களால் எமது சுற்றுலாக் கைத்தொழில் பாரிய அளவில் பாதிக்கப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகளுக்கு இந்நாட்டில் பாதுகாப்பு வழங்கவேண்டியது நமது பொறுப்பு ஆகும். இப்படியான விடயங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

ஒரு சிலர் செய்யும் தவறுகளால் இந்நாட்டின் முழுமையான சுற்றுலாத்துறையும் பாதிக்கப்படுவதை இனிமேலும் அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *