விலையுயர்ந்த காரை வாங்கிய ஷேக்? சிறையில் அடைத்த துபாய் அரசு!
தட்டில் கோடிக்கணக்கில் பணத்தை எடுத்து வந்து சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்குவது போல விலையுங காரை வாங்கிய துபாய் ஷேக் வீடியோ வைரலானதால் கைது செய்யப்பட்டுள்ளார். விலையுயர்ந்த காரை வாங்கும் அளவிற்கு பணம் படைத்தவரா இவர்? இவர் ஏன் கைது செய்யப்பட்டுள்ளார்? இதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன? விரிவாக காணலாம் வாருங்கள்.
துபாய் நாட்டில் ஷேக்குகள் எல்லாம் வெள்ளை நிற அங்கி போன்ற ஆடை அணிந்து பெரும் பணக்காரர்களாக இருப்பார்கள் என்ற தோற்றம் உலகம் முழுவதும் இருந்து வருகிறது. துபாய் நாட்டில் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் இப்படியான தோற்றம் உலகம் முழுவதும் இருக்கிறது. ஆனால் துபாயில் வெள்ளை அங்கி எல்லாம் பெரும் பணக்காரர்களாக மட்டுமே இருப்பதில்லை.
இந்நிலையில் கடந்த வாரம் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவியது. அதில் துபாய் நாட்டில் வெள்ளை நிற அங்கி போன்ற ஆடை அணிந்த நபர் அந்நாட்டிலுள்ள ஒரு கார் ஷோரூம்-க்கு சென்று அங்கு கார்களை வாங்குவது போல வீடியோ ஒன்றை எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
அவர் கார் ஷோரூமுக்கு செல்லும் போது பின்னால் ஒரு பெரிய தட்டில் பணத்தை எடுத்து வருவது போலவும் அவர் விலையுயர்ந்த கார்களை எல்லாம் சூப்பர் மார்க்கெட்டில் ஏதோ பொருட்களை வாங்குவது போல வாங்குவதுமாக செய்து கொண்டிருந்தார். இந்த வீடியோவை பார்த்த பலருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இவ்வளவு பணபலம் படைத்த ஒருவர் எப்படி இவ்வளவு சாதாரணமாக வந்து கார்களை எல்லாம் வாங்குகிறார் என நினைத்துக் கொண்டிருந்தனர். இதை ஏன் அவர் வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளார் எனவும் யோசித்தனர். பலர் இந்த வீடியோவை பகிர்ந்து துபாய் நாட்டில் ஷேக்குகள் போல வாழ வேண்டும் என சமூக வலைதளங்களில் பிதற்றிக் கொண்டிருந்தனர். இதனால் இந்த வீடியோ உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வைரலானது.
அதன் பின்னர் விசாரித்து பார்க்கும்போது தான் இது உண்மையான வீடியோ இல்லை இது ஒரு போலியான வீடியோ என்றும் துபாய் ஷேக் போல வேடமிட்ட ஒருவர் வேண்டுமென்றே இவ்வாறு வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதும் தெரியவந்தது. இந்நிலையில் இந்த வீடியோவிலிருந்த வரை துபாய் அரசு கைது செய்துள்ளது.
இந்த வீடியோவில் அவர் துபாய் நாட்டின் பாரம்பரிய ஆடைகளை அணிந்து எமிரேட்டி என அழைக்கப்படும் இஸ்லாமிய குழுவின் மரியாதையை குறைக்கும் வகையிலும் சமூகத்தில் அவர்களது அந்தஸ்தையும் குறைக்கும் வகையிலும் அவர்களை அவமானப்படுத்தும் வகையிலும் இருப்பதாக கருதினர். இதனால் அந்த வீடியோ குறித்து புகார் எழுந்தது.
மேலும் இவர் இந்த வீடியோவில் ஆங்கிலத்தில் பேசுகிறார் அது மத்திய கிழக்கு மற்றும் அரபு நாடுகளில் உள்ள மக்கள் ஆங்கிலம் பேசும் விதத்தில் இருக்கிறது இது அவர்களை அவமானப்படுத்தும் வகையில் இருக்கிறது என்று குறிப்பிட்டு இவரை துபாய் அரசு கைது செய்துள்ளது. தற்போது அவர் சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.
மேலும் இந்த வீடியோ எடுக்கப்பட்ட கார் ஷோரூம் உரிமையாளரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். அவரிடமும் இந்த வீடியோ எடுக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் இதற்காக அனுமதி பெறப்பட்ட விஷயங்கள் குறித்து விசாரணை நடைபெற உள்ளது. இந்த விசாரணை முடிந்த பிறகு தான் இதற்கான தண்டனை விபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகும்.