முதுகில் ஊர்ந்த கருநாகம் விமானத்தை அவசரமாக தரையிறங்கிய விமானி!

முதுகில் ஊர்ந்த கருநாகத்தால் விமானத்தை அவசரமாகத் தரையிறங்கிய விமானி

தென்னாப்பிரிக்காவில் பிரிட்டோரியாவுக்குப்
(Pretoria) பயணம் மேற்கொண்டிருந்த தனியார் விமானத்தில் அழையா விருந்தாளியாக நுழைந்த கருநாகத்தால் பதற்றம் ஏற்பட்டது.

அதுவும் 11,000 அடி வானில் பறந்துகொண்டிருந்தபோது விமானி ருடோல்ப் எராஸ்முஸ் (Rudolph Erasmus) கருநாகத்தைக் கண்டார்.

தமது முதுகில் ஜில்லென்று ஏதோ ஊர்வதுபோன்ற உணர்வு ஏற்பட்டதாகக் கூறிய அவர் அது தண்ணீர் போத்தல் என்று நினைத்திருக்கிறார்.

ஆனால் இடப்பக்கம் திரும்பிக் கீழே பார்த்ததும் திடுக்கிட்டார்.

தரையில் கருநாகம் இறங்கிச் செல்வதைக் கண்டு தாம் அதிர்ச்சியடைந்ததாக விமானி BBC இடம் கூறினார்.

4 பேர் இருந்த அந்த விமானத்தை அவர் உடனடியாக வெல்கொம் (Welkom) நகரில் அவசரமாகத் தரையிறக்கினார்.

கருநாகம், பயணிகள் அமர்ந்திருந்த பகுதிக்குச் சென்றுவிடும் என்ற அச்சத்தில் அவர் பாம்பு இருப்பது பற்றி அவர்களுக்கும் அறிவித்தார்,

பயத்தில் பயணிகள் உறைந்துபோனதையும் தம்மால் உணர முடிந்ததாக எராஸ்முஸ் தெரிவித்தார்.

விமானிகளுக்குப் பல்வேறு சூழ்நிலைகளைக் கையாளப் பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தாலும் பாம்பு இருந்தால் என்ன செய்வது என்பது சொல்லித்தரப்படவில்லை என்றார் அவர்.

பதற்றத்திலும் விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கிய அவரைத் தென்னாப்பிரிக்கச் சிவில் விமானத்துறை ஆணையர் உள்ளிட்ட பலர் பாராட்டியுள்ளனர்.

ஆனால் தரையிறங்கிய பின்னர் தேடிப்பார்த்ததில் கருநாகம் கண்ணில் அகப்படவில்லை. அதனைத் தேடும் பணிகள் நீடிக்கின்றன.

கருநாகம் கொத்தினால் அடுத்த முப்பதே நிமிடங்களில் அதன் நஞ்சு ஆளைக் கொன்றுவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *