ஒரே நேரத்தில் பத்து பேர் அமர்ந்து பயணிக்கக் கூடிய கார் அறிமுகம்!
ஒரே நேரத்தில் பத்து பேர் அமர்ந்து பயணிக்கக் கூடிய கார் மாடலை பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான போர்ஸ் மோட்டார்ஸ் (Force) இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்தியாவில் உள்ள அதிக உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தினரை கவரும் பொருட்டு இந்த வாகனத்தை விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது, போர்ஸ்.
இது ட்ராக்ஸ் க்ரூஸர் (Trax Cruiser) காரின் அப்கிரேட் வெர்ஷன் ஆகும். சிட்டிலைன் (Force Citiline) என்கிற பெயரில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. முன் பக்கத்தில் இதே பேட்ஜே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதிலேயே 10 சீட்டர் வசதியை முதல் முறையாக ஃபோர்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.
10 பேர் அமர்ந்து சென்றாலும் இந்த காரில் இட நெருக்கடி என்பதே இருக்காது என ஃபோர்ஸ் தெரிவித்து இருக்கின்றது. அறிமுகமாக இந்த காருக்கு 16 லட்சம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
இந்தியாவில் சொகுசு கார்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துக் காணப்படுகின்றது. இதேபோல் பேமிலி உடன் வெளி ஊர்களுக்கு பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் நாட்டில் கணிசமாக உயர்ந்திருக்கின்றது. ஆனால் குடும்பத்துடன் வெளியூர்களுக்கு செல்ல ஏற்ற கார் மாடல்கள்தான் சற்று குறைவான எண்ணிக்கையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இந்த குறையை போக்கும் விதமாகவே இந்தியாவின் மிகப் பெரிய காராக ஃபோர்ஸ் சிட்டிலைன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. 10 இருக்கைகள் மற்றும் மிக தாராளமான இட வசதிக் கொண்ட காராகவும் இதனை போர்ஸ் வடிவமைத்து இருக்கின்றது. போர்ஸ் சிட்டிலைன் ஓர் எம்யூவி ரக காராகும்.
இந்த கார் அதிக குடும்ப உறுப்பினர்களைக் கொண்டவர்களுக்கு மட்டுமல்ல, பெரிய நட்பு வட்டாரத்தைக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும். ஒரே காரில் 10 பேர் வரை அரட்டை அடித்த வண்ணம் செல்ல ஏதுவாக வாகனமே இது. முன்னோக்கி பார்க்கின்ற வகையிலான இருக்கைகளே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
நீண்ட தூர ட்ரிப்களை அதிக உற்சாகத்துடன் மேற்கொள்ளவும் இந்த வாகனம் ஏற்றதாக இருக்கின்றது. இதேபோல், அதிக தொழில்நுட்ப வசதிகளும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. மிக முக்கியமாக இரட்டை ஏசி சிஸ்டம் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. அதிக அளவில் பயணிகள் பயணிக்கும்போது போதுமான குளிர்ச்சியை வழங்க வேண்டும் என்பதற்காக இரு ஏசி செட்-அப் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
இத்தடன், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், பன்முக சார்ஜிங் போர்ட்கள், ரியர் பார்க்கிங் சென்சார், தண்ணீர் பாட்டில்களை தாங்கும் ஹோல்டர்கள், ஃபோல்டிங் ரக மூன்றாம் வரிசை இருக்கைகள் என எக்கசக்க வசதிகள் ஃபோர்ஸ் ட்ராக்ஸ் க்ரூஸரின் அப்டேட் வெர்சன் சிட்டிலைனில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, அதிக லக்கேஜ்களை ஏற்றிச் செல்வதற்கான வசதிகளும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், பயணிகள் சுலபமாக ஏறி-இறங்க ஏதுவாக பெரிய நுழைவாயில்கள், அகலமாக திறக்கும் கதவுகள் உள்ளிட்ட வசதிகளும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், ஸ்பேர் வீலும் அவசர உதவிக்காக இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
எஞ்ஜினைப் பொருத்த வரை இந்த காரில் எஃப்எம் காமன் ரெயில் டீசல் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மெர்சிடிஸ் பென்ஸ் தயாரிப்பாகும். இந்த மோட்டாரால் அதிகபட்சமாக 91 குதிரை திறனையும், 250 என்எம் டார்க்கையும் வெளியேற்ற முடியும். ஆஃப்-ரோடு பயணங்களுக்கும் உகந்த வாகனமாகவும் போர்ஸ் சிட்டிலைன் இருக்கின்றது.
இதற்கேற்பவே இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்கப்பட்டு இருக்கின்றது. 191 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸே இந்த கார் கொண்டிருக்கின்றது. இதேபோல், இதன் அகலம் 1818 மிமீட்டராகவும், நீளம் 5,120 மிமீட்டராகவும், உயரம் 2,027 மிமீட்டராகவும் மற்றும் வீல் பேஸ் 3,050 மிமீட்டராகவும் இருக்கின்றது. இந்த பாரிய அளவே போர்ஸ் சிட்டிலைனின் அதிக இட வசதிக்கு காரணமாக இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
அதிக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பெரிய பட்டாளத்தைக் கொண்டிருக்கும் நண்பர்கள் கூட்டாக பயணிக்க உகந்த வாகனம் இதுவாகும். இப்போதைய நிலவரப்படி குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் சுற்றுலா செல்ல வேண்டும் எனில் பலர் டிராவல்லரை பயன்படுத்தி வருகின்றனர். அதில், 14 பேர் வரை மட்டுமே அமர்ந்து பயணிக்க முடியும். இதற்கே டஃப் கொடுக்கும் வகையில் போர்ஸ் சிட்டிலைன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.