தங்கம் கடத்தி வந்த பெளத்த பிக்கு கைது!
இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் தங்க ஆபரணங்களை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாய் நகரில் இருந்து ஓமான், மஸ்கட் ஊடாக விமானத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த சந்தெகநபரின் பயணப் பொதியில் இருந்து குறித்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சுமார் 225 இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள், மடிக்கணினிகள், தங்க பிஸ்கட்கள் மற்றும் தங்கத் துண்டுகள் போன்றவற்றை சந்தேகநபர் நாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.
திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வரும் பிக்கு 23 வயதுடையவர் என தகவல் கிடைத்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து சந்தேகநபருக்கு அபராதம் விதித்த பின்னர் விடுவிக்க சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.