சஹ்ரானை வாழ்நாளில் நான் கண்டதே இல்லை! – தாக்குதலின் பின்பே படத்தைப் பார்த்தேன் என்கிறார் ரிஷாத்

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவங்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமை என் வாழ்நாளில் கண்டதே இல்லை. தாக்குதலின் பின்னரே சஹ்ரானின் படத்தைப் பார்த்தேன்.”

– அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினமன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன் இன்று சாட்சியங்களை அளிக்கும்போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கேள்வி:- ச.தொ.ச வாகனங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளனவா?

பதில்:- கடந்த ஒக்டோபரில் அமைக்கப்பட்ட அரசுக்கு என்னை அழைத்தனர். ஆனால், நான் செல்லவில்லை. இதனால் என் மீது குற்றம்சாட்டினர். இந்தக் கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து அவர்கள் பொலிஸில் புகார் செய்யக்கூடும் என நான் எதிர்பார்த்தேன். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. அதனால் நான் பொலிஸ் சென்று அவர்கள் மீது புகார் அளித்தேன்.

கேள்வி:- தாக்குதல் விசாரணையில் தலையிட்டதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளனவா? முஸ்லிம் மத விவகார அமைச்சின் ஆலோசகரின் மகன் குறித்து இராணுவத் தளபதியிடம் பேசினீர்களா?

பதில்:- அவர் அரச பொது நிர்வாக சேவையின் முதற்தர அதிகாரி. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சராக இருந்தபோது, ​​அவர் அந்த அமைச்சில் மேலதிக செயலாளராகவும் பணியாற்றினார். 1990இல் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து விடுதலைப்புலிகளினால் வெளியேற்றப்பட்டபோது அவர் புனர்வாழ்வு இயக்குநராக இருந்தார். இனந்தெரியாத குழு ஒன்று தனது மகனை அழைத்துச் சென்றதாகக் கூறி அவர் பொலிஸில் புகார் அளித்துள்ளார். எங்களிடம் அவர் இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். விசேட அதிரடிப்படையும் அப்படியே கூறியுள்ளது. அவர் என் வீட்டுக்கு வந்து கண்ணீருடன் தனது மகன் எங்கே இருக்கின்றார் என்று தேடித்தருமாறு சொன்னார். தெஹிவளை பொலிஸில் கேட்டபோதும், ​தெஹிவளைக்குப் பொறுப்பான டி.ஐ.ஜி விக்கிரமசிங்கவிடம் கேட்டபோதும் அவர்கள் கைதுசெய்யவில்லை என்றும், ஆனால் தாம் தேடுவதாகவும் கூறினார்கள். நான் இராணுவத் தளபதியை அழைத்து அவரிடம் இது பற்றி வினவி குறித்த நபரைப் பார்க்கச் சொன்னேன். தொடர்ந்து அந்தத் தந்தையார் கேட்டுக்கொண்டதால் இன்னொரு முறை அழைத்தபோது, இதனைக் கவனிப்பதாக இராணுவத்தளபதி கூறினார். மீண்டும் 28ஆம் திகதி அழைத்தபோது கைதை உறுதி செய்த அவர் கைதானவரை பொலிஸில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். அதன் பிறகு நான் அழைப்பை ஏற்படுத்தவில்லை. என்ன நடந்தது என்பதை அறிய மட்டுமே நான் விரும்பினேன். மகன் இன்னும் உயிருடன் இருக்கிறாரா என்று பார்க்க தந்தை விரும்பினார். அவர் இராணுவக் காவலில் இருப்பதை அறிந்ததும், நான் திரும்ப அழைக்கவில்லை.

கேள்வி:- தொழிலதிபர் இப்ராஹிமிடம் பொருட்களை வாங்க அழுத்தங்களை வழங்கினீர்களா?

பதில்:- நீங்கள் அதைப் பற்றி அமைச்சின் செயலாளரிடம் கேட்கலாம். நான் அழுத்தங்களை வழங்கியதில்லை.

கேள்வி:- துருக்கி தீவிரவாதிகள் பற்றிய தகவல்களை அனுப்பியிருந்தமை உங்களுக்குத் தெரியுமா?

பதில்:- எனக்குத் தெரியாது.

கேள்வி:- நீங்கள் காத்தான்குடியில் அரசியல் செய்கிறீர்களா?

பதில்:- பெரிய அரசியல் என்று எதுவும் இல்லை. எங்களிடமிருந்து ஒரு பிரதேச சபை உறுப்பினர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கேள்வி:- பயங்கரவாதக் குழுவின் செயற்பாடுகள் பற்றி முன்னர் உங்களுக்குத் தெரியுமா? பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரானை உங்களுக்குத் தெரியுமா?

பதில்:- உங்கள் மதம் உங்களுக்கானது. எனது மதம் எனக்கானது எனக் குர்ஆனில் சொல்லப்பப்படுகின்றது. சிலருக்குப் பிரச்சினை இருக்கலாம் . நான் ஒரு அரசியல்வாதி. நான் மதப் பிரச்சினைகளில் ஈடுபடவில்லை. சஹ்ரான் ஒரு மௌலவி அல்லர். அவர் ஒரு மதத் தலைவர் அல்லர். அவர் மட்டுமே தன்னை மௌலவி என்று அழைத்தார். இந்தச் சம்பவத்துக்கு முன்னர் பயங்கரவாதக் குழுவின் செயற்பாடுகள் பற்றி எனக்குத் தெரியாது. சஹ்ரானை என் வாழ்நாளில் நான் சந்தித்ததேயில்லை.

கேள்வி:- ஹிஸ்புல்லா உங்கள் கட்சியில் இருந்தார் அல்லவா ?

பதில்:- ஹிஸ்புல்லா எங்கள் கட்சியில் சுமார் 5 ஆண்டுகளாக இருந்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை நாங்கள் ஆதரித்தபோது, ​​அவர் மஹிந்த ராஜபக்சவை ஆதரிக்கச் சென்றார்.

கேள்வி:- 2015இல் வாக்களித்தவர்கள் சஹ்ரானுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

பதில்:- தெரிவுக்குழுவில் சொல்லப்பட்டதை நான் பார்த்தேன். பின்னர் நான் எங்கள் அமீர் அலியிடம் கேட்டேன். அத்தகைய ஒப்பந்தம் எதிலும் கையெழுத்திடவில்லை என்று அவர் கூறினார்.

கேள்வி:- நீங்கள் சஹ்ரானை சந்திக்கவில்லை என்று சொன்னீர்கள். ஆனால், நீங்கள் சந்தித்த படங்கள் வெளியாகினவே?

பதில்:- அது 015 ஒக்டோபர் 15ஆம் திகதியன்று அரபுக் கல்லூரியில் நடந்த விழாவில் எடுக்கப்பட்ட படம். அது சஹ்ரான் அல்ல. அது மௌலவி நிஸ்தார். தன்னைச் சஹ்ரான் என்று தொலைக்காட்சியில் காட்டியதாக அவர் என்னிடம் கடிதம் மூலம் தெரிவித்தார். அவர் நிட்டம்புவ பொலிஸ் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்துள்ளார். அவர் கொழும்பு பொலிஸ் தலைமையகத்துக்கும் சென்று புகார் அளித்துள்ளார். இவை தவறான குற்றச்சாட்டுகள். சஹ்ரானை என் வாழ்நாளில் கண்டதில்லை. தாக்குதலின் பின்னரே சஹ்ரானின் படத்தைக் கண்டேன்.

கேள்வி:- வில்பத்துவில் உங்களுக்குப் பல ஏக்கர் நிலம் இருப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் இருந்தனவா?

பதில்:- 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு, வடக்கு மாகாணத்துக்கு எந்த நிலமும் வழங்கப்படவில்லை. 2009இல் போருக்குப் பிறகு ஒரு பணிக்குழு நிறுவப்பட்டது. இராணுவத் தளபதி, பொலிஸ்மா அதிபர், வனப் பாதுகாப்புப் பணிப்பாளர் நாயகம் மற்றும் அரச அதிபர் ஆகியோர் அதில் இருந்தனர். எங்கு மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்று அந்தக் குழுவே முடிவு செய்தது. முன்னைய அரசே இதைச் செய்தது.

வில்பத்து தேசிய பூங்காவுக்குள் ஒரு குடும்பத்துக்குக்கூட நிலம் வழங்கப்படவில்லை. மன்னாரிலேயே மீள்குடியேற்றம் செய்யப்பட்டது. ஆனால், வில்பத்து தேசிய பூங்காவுக்குள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை விசாரிக்க ஜனாதிபதி ஒரு குழுவை நியமித்தார். வில்பத்து தேசிய பூங்காவுக்குள் மீள்குடியேற்றம் நடக்கவில்லை என்று அதன் அறிக்கை கூறுகின்றது. இந்த அரசு வந்தபோது, ​​எந்த நிலமும் வழங்கப்படவில்லை.

என் மீது தவறான செய்திகளை வெளியிடும் ஊடக நிறுவனங்களின் தலைவர்களிடம் விசாரணையை நடத்துமாறு தெரிவுக்குழுவிடம் கேட்கிறேன். 55 ஏக்கர் நிலப்பரப்பு மாத்திரமே எனக்கு உள்ளது. 8000 ஏக்கர் நிலப்பரப்பு கிடையாது. அவ்வாறு காணி இருக்குமாயின், 55 ஏக்கரைத் தவிர ஏனைய காணிகளை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *