கோட்டாபய பதவி இராஜினாமா அதிர்ச்சியில் கிணற்றில் குதித்த நபர்!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்ததாக சபாநாயகர் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த செய்தி இன்று காலை ஊடகங்களில் வெளியானதையடுத்து அதிர்ச்சியடைந்த 66 வயதுடைய நபர் ஒருவர் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்துள்ளார்.
தொம்பே பிரதேசத்திலேயே இந்த தற்கொலை முயற்சி பதிவாகியுள்ளது.
நீண்டகாலமாக ராஜபக்ச குடும்பத்தை ஆழமாக நேசித்து வந்த இந்த நபர், கோட்டபாய பதவி விலகினால் தான் வாழமாட்டேன் என நேற்று முதல் அங்குள்ள மக்களிடம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வீட்டினுள் இருந்தவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்கொலைக்கு முயன்றவரின் மகன் பல நாட்களாக கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை இங்கு விசேட நிகழ்வாகும்.
மகனுக்கும் தந்தைக்கும் இடையில் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.