கோத்தபாய ராஜபக்ச முதல் மார்கோஸ் வரை நாட்டை விட்டு ஓடிய தலைவர்கள்!

இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியினால் மக்கள் தெருவுக்கு வந்து போராடினர். அரசு கட்டமைப்புகள் மக்கள் பிடியில் சென்ற உடன் போராட்டம் இறுதிக் கட்டத்தை எடுத்தது.

கோத்தபய ராஜபக்ச பதவி விலகுவதற்கு முன்பு புதன்கிழமை நாட்டை விட்டு வெளியேறினார். அவர் மாலத்தீவின் தலைநகரான மாலேயில் இருந்து சிங்கப்பூருக்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது.அவர் அங்கிருந்து வேறு ஒரு ஆசிய நாட்டிற்கு செல்வார் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டு மக்களின் போராட்டத்தை ஒட்டி ராஜபக்ச மட்டுமல்ல பல நாட்டுத் தலைவர்கள் தமது நாட்டை விட்டு ஓடியிருக்கிறார்கள். அவர்களில் சிலரை இக்கட்டுரையில் பார்க்கலாம்.

இடி அமீன் 1971 மற்றும் 1979க்கு இடையில் உகாண்டாவின் அதிபராக இருந்தார். அவரது சர்வாதிகாரக் கொடுமைகள் காரணமாக அவர் உகாண்டாவின் கசாப்புக்காரன் என்று அழைக்கப்பட்டார். அவரால் உகாண்டாவில் 3,00,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் மரணமடைந்தனர். அவர் லிபியாவின் ஆட்சியாளர் கடாஃபியுடன் நட்பாக இருந்தார். 1979ஆம் ஆண்டு நடந்த புகழ்பெற்ற ஏர்பிரான்ஸ் விமானம் கடத்தப்பட்டதற்கு இடி அமீனே குற்றம் சாட்டப்பட்டார்.

1978இல் தான்சானியா மீது படையெடுக்குமாறு அமீன் தனது படைகளுக்கு உத்திரவிட்டார். ஆனால் படையெடுப்பு தோல்வி அடைந்ததை ஒட்டி அவர் லிபியாவிற்கு தப்பி ஓடினார். 1980இல் அவர் சவுதி அரேபியாவிற்கு சென்று 2003இல் இறக்கும் வரை அங்கேயே வாழ்ந்தார்.

முகமது ரஸா பஹ்லவி, ஈரான் – தப்பிச் சென்ற நாடுகள் மொராக்கோ, பஹாமஸ், அமெரிக்கா, மெக்சிகோ, பனாமா, எகிப்து
1941 மற்றும் 1979 க்கு இடையில் தன்னை ‘ஈரானின் ஷா’ என்று வர்ணித்துக் கொண்ட முகமது ராசா பஹ்லவி, மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாக இருந்தார்.

மேலும் அவர் ஈரானில் வெள்ளைப்புரட்சியைத் தொடங்க அமெரிக்காவுடன் தீவிரமாக ஒத்துழைத்தார். இது உள்கட்டமைப்பை உருவாக்குதல், தொழில்களை ஊக்குவிப்பது மற்றும் தேசத்திலிருந்து மலேரியாவை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டது.

இருப்பினும், அவர் ஷியா மதகுருமார்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு ஆளானார். 1978 இல், ஷியா மதகுருவான அயதுல்லா கொமேனியின் தலைமையில் ஈரானியப் புரட்சி தொடங்கப்பட்டது.

1979 இல், அவர் நாட்டை விட்டு வெளியேறி எகிப்துக்கும் பின்னர் மொராக்கோவிற்கும் சென்றார். பின்னர் அவர் பஹாமாஸ் மற்றும் மெக்சிகோவிற்கு சென்றார். அதே ஆண்டு, நிணநீர் புற்றுநோய்க்கான சிகிச்சைக்காக அவர் அமெரிக்காவில் இறங்கினார். அவர் அடுத்ததாக எகிப்தில் புகலிடம் பெற்றார். அங்கு அவர் 1980 இல் 60 வயதில் இறந்தார்.

பெர்டினாண்ட் மார்கோஸ், பிலிப்பைன்ஸ் – தப்பிச் சென்ற நாடு அமெரிக்கா
ஃபெர்டினாண்ட் மார்கோஸ் 1965 முதல் 1986 வரை பிலிப்பைன்ஸின் பிரதமராகவும் அதிபராகவும் இருந்தார். ஒரு வழக்கறிஞரான மார்கோஸ், ஊழல் மற்றும் ஜனநாயகத்தை நசுக்குவதற்காகக் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். அவர் 1965 இல் ஜனநாயக முறையில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விரைவில் 1972 இல் இராணுவச் சட்டத்தை அமல்படுத்தினார். அந்தக் காலகட்டத்தில் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். 1981 இல், அவர் இராணுவச் சட்டத்தை முடித்தார். ஆனால் அதே ஆண்டில் நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1983 இல் அவர் எதிர்க்கட்சித் தலைவர் பெனிக்னோ அக்வினோ ஜூனியரை கொலை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டபோது அவரது வீழ்ச்சி துவங்கியது. பிப்ரவரி 25, 1986 இல், அவர் நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவின் ஹவாய் நகருக்குச் சென்றார். அங்கு அவர் 1989 இல் இறந்தார். மார்கோஸின் மகன் ஃபெர்டினாண்ட் ரோமுவால்டெஸ் மார்கோஸ் ஜூனியர் ஜூன் 30, 2022 அன்று பிலிப்பைன்ஸ் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புல்ஜென்சியோ பாடிஸ்டா, கியூபா – தப்பிச் சென்ற நாடுகள் போர்ச்சுகல், ஸ்பெயின்
ஃபுல்ஜென்சியோ பாடிஸ்டா இரண்டு பதவிக் காலங்களுக்குக் கியூபாவை ஆட்சி செய்தார். ஒன்று 1933 மற்றும் 1944 க்கு இடையில், மற்றொன்று 1952 மற்றும் 1959 க்கு இடையில். 1933 இல், அவர் கார்லோஸ் மானுவல் டி செஸ்பெடெஸுக்கு எதிரான கிளர்ச்சியை வழிநடத்தி அவரது அரசாங்கத்தைக் கவிழ்த்தார். அவர் நாட்டின் உண்மையான தலைவராக ஆனார்.

அவரது முதல் பதவிக்காலம் செழிப்பு மற்றும் அமைதிக்கான ஒன்றாகக் கருதப்படுகிறது. அவர் சிவில் சமூகம் மற்றும் இராணுவத்தின் ஆதரவைப் பெற்றார். அவர் 1940 இல் முறையாக ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் 1944 இல் அவரது பதவிக்காலம் முடிந்ததும் அமெரிக்கா சென்றார்.

அவர் அமெரிக்காவில் வசித்ததால், கியூபா மீண்டும் ஊழல் தலைவர்கள் மற்றும் பொது சேவைகளின் வீழ்ச்சியால் நெருக்கடிக்குள்ளானது. 1952 இல், அவர் நாடு திரும்பினார். மற்றும் உயிர்ப்பலியற்ற சதி மூலம் கார்லோஸ் ப்ரியோ சொக்கராஸை பதவியிலிருந்து அகற்றினார்.
இருப்பினும், இரண்டாவது பதவிக்காலம் அவரை ஒரு கொடூரமான சர்வாதிகாரியாக மாற்றியது. அவர் பெரும் தொகையை மோசடி செய்ததாகவும், ஜனநாயக செயல்முறையை நசுக்குவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. 1954 மற்றும் 1958 தேர்தல்களில் அவர் மட்டுமே ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்டார்.

1958 இல், ஃபிடல் காஸ்ட்ரோவால் கியூபப் புரட்சி தொடங்கப்பட்டது. அது பாடிஸ்டாவின் ஆட்சியின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. 1959 இல், அவர் டொமினிகன் குடியரசிற்கும், பின்னர் போர்ச்சுகலுக்கும் தப்பிச் சென்றார். 1973 இல், அவர் இறந்தபோது, அவர் ஸ்பெயின் மாநிலமான மலகாவில் வசித்து வந்தார்.

மொபுட்டு செசே செகோ, காங்கோ ஜனநாயக குடியரசு – தப்பிச் சென்ற நாடுகள் டோகோ, மொராக்கோ

1965 மற்றும் 1997 க்கு இடையில் மொபுடு செசே செகோ ஜைரின் (தற்போதைய காங்கோ ஜனநாயகக் குடியரசு) ஜனாதிபதியாக இருந்தார். அவர் முதலில் ஒரு பத்திரிகையாளராக இருந்தார். 1960 இல் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, அவர் அப்போதைய ஜனாதிபதி ஜோசப் கசவுபுவால் தேசிய பாதுகாப்புக்கான செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர், அவர் நாட்டின் ராணுவத்தின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

1965ல் கசவுபுவை பதவி நீக்கம் செய்து அதிகாரத்தை தன் கையில் எடுத்தார். இருப்பினும், அவரது ஆட்சியில் ஊழல் மற்றும் தவறான நிர்வாக வழக்குகள் அதிகரிக்கத் தொடங்கின. காங்கோவின் அண்டை நாடுகளின் அரசியலில் தலையிட்டதற்காக மேற்கத்திய நாடுகளின் நிதி உதவியும் அவருக்கு வழங்கப்பட்டது.

அமெரிக்க ரஷ்ய பனிப்போர் முடிவுக்கு வந்த பிறகு, நிதி உதவி திரும்பப் பெறப்பட்டது. செகோவுக்கு எதிரான போராட்டம் அதிகமாகி, 1997 இல் அவர் டோகோவுக்குத் தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதே ஆண்டு மொராக்கோவின் ரபாத்தில் அவர் இறந்தார்.

சைன் அல்-அபிடின் பென் அலி, துனிசியா – தப்பிச் சென்ற நாடு சவூதி அரேபியா
சைன் அல் அபிடின் பென் அலி 1987 மற்றும் 2011 க்கு இடையில் துனிசியாவின் ஜனாதிபதியாக பணியாற்றினார். 1964 முதல் 1974 வரை, அவர் துனிசியா இராணுவப் பாதுகாப்புத் தலைவராக பணியாற்றினார். இது அவருக்கு உயர் அரசாங்க அதிகாரிகளோடு தொடர்பை ஏற்படுத்தியது. அவர் மொராக்கோவில் உள்ள துனிசிய தூதரகத்தின் இராணுவ இணைப்பாளராக ஆனார். அவர் போலந்திற்கான தூதராகவும் பணியாற்றினார். 1986ல் உள்துறை அமைச்சரானார்.

1987 இல், அவர் ஜனாதிபதி ஹபீப் போர்குய்பாவால் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

அவர் இறுதியில் துனிசியாவின் அரசியலைச் சுற்றி தனது பிடியை இறுக்கினார். மனித உரிமை மீறல் மற்றும் ஜனநாயக சக்திகளை அடக்கியதற்காக அவர் விமர்சனத்திற்கு உள்ளானார். போதைப்பொருள் கடத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

அரபு வசந்த காலத்தில் நடந்த மல்லிகைப் புரட்சியின் போது நாட்டை விட்டு வெளியேறி சவுதி அரேபியா சென்றார். அவர் துனிசியாவில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பல வழக்குகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். இருப்பினும், அவர் 2019 இல் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இறந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *