ஒரு வாரத்திற்கு தேவையான எரிபொருளை வழங்க LIOC நிறுவனத்திடம் கோரிக்கை
நெரிசலைக் குறைப்பதற்காக ஒரு வாரத்துக்கான எரிபொருளை LIOC நிறுவனத்தின் நிரப்பு நிலையங்களுக்கு ஒரேயடியாக அனுப்பி வைக்குமாறு இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பல நாட்களாக வரிசையில் நிற்கும் அனைவருக்கும் எரிபொருள் விநியோகிக்க முடியாததால் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக சங்கத்தின் தலைவரான குசும் சந்தநாயக்க தெரிவித்தார்.
ஊடகச் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒரு நிரப்பு நிலையத்தின் தேவை சுமார் 19,000 அல்லது 30,000 லீற்றர்களாக இருக்கும் போது, 6,600 லீற்றர் பெளசரை அனுப்புவது பயனுள்ளதாக இருக்காது.
கிட்டத்தட்ட 200 LIOC எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாரிய வரிசைகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இராணுவம், பொலிஸார் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பணியாற்றும் இதர பணியாளர்களும் மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாததால் சிரமங்களை எதிர்நோக்குவதாக அவர் தெரிவித்தார்.
எனவே LIOC பாரிய பங்குகளை ஒரே நேரத்தில் அனுப்பினால், வரிசையில் நிற்கும் மக்களுக்கு அது பெரும் நிவாரணமாக இருக்கும்.
அத்தியாவசிய சேவைகள் எனப்படும் வாகனங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கு விசேட ஏற்பாடுகள் எதுவும் வழங்கப்பட வேண்டியதில்லை அல்லது நிரப்பு நிலையங்களில் தனியான வரிசைகள் அமைக்கப்பட வேண்டியதில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியதையும் அவர் இதன் போது தெரிவித்தார்.