திறப்பு விழாவின் போது இடிந்து விழுந்த பாலம்!
திறப்பு விழாவின்போது புதிதாகக் கட்டப்பட்ட நடைபாதை மேம்பாலமொன்று இடிந்து விழுந்த சம்பவம் மெக்சிகோவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவின் மொரிலொஸ் மாகாணம் ஹர்வவசா நகரில் மரக்கட்டை மற்றும் இரும்பினால், புதிதாக நடைமேடை மேம்பாலமொன்று அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இப் புதிய பாலத்தின் திறப்பு விழா நேற்று முன்தினம் (07) நடைபெற்றுள்ளது.
இத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட அந்நகர மேயர் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட அப்பகுதி மக்கள் குறித்த பாலத்தில் நடந்து சென்றுள்ளனர்.
இதன்போது எதிர்பாராத விதமாக அப்பாலம் பாரம் தாங்க முடியாமல் இடிந்து விழுந்துள்ளது.
இதில், மேயர் ஜோஸ் லுயிஸ் யுரியோசெட்யு உட்பட பலர் 10 அடி பள்ளத்தில் விழுந்தனர்.
இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.