அழகிய இலங்கை தேசத்தை 30 மாதங்களில் திவாலாக்கிய ராஜபக்ச குடும்பம்!

நவம்பர் 2019 தேர்தலுக்கு முன்பாக, இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கோத்தபய ராஜபக்ச வரி குறைப்புகளை முன்மொழிந்தார். இதன் மூலம் ஆளும் கட்சிக்கு எதிராக இருந்த அலையை மாற்றுவதற்கு இது உதவுமென அவர் நினைத்தார்.

அப்போதைய நிதியமைச்சர் மங்கள சமரவீர, மதிப்புக் கூட்டப்பட்ட வரியை 15% இருந்து 8% ஆகக் குறைத்து மற்ற வரிகளை அகற்றுவதற்கான இந்த ஆபத்தான உறுதிமொழியை எதிர்ப்பதற்கு ஒரு விளக்கக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். அவருக்கு, இது ஒரு எளிமையான கணிதம். இலங்கை மற்ற எந்த நாட்டையும் விட ஒப்பீட்டளவில் குறைவான வருவாயை ஈட்டும் ஒரு நாடு. மேலும் அதன் அதிக கடன் சுமையானது சர்வதேச நாணய நிதியத்திலிருந்து பணத்தைப் பெறுவதற்குக் கட்டாயப்படுத்தியது.

“கோத்தபயவின் இந்த முன்மொழிவுகள் செயல்படுத்தப்பட்டால், முழு நாடும் திவாலாகிவிடும், மேலும் இலங்கை எனும் நாடு மற்றொரு வெனிசுலா அல்லது மற்றொரு கிரேக்கமாக மாறும்” என்று அமைச்சர் எச்சரித்தார்.

இலங்கை ஏன் நெருக்கடியில் சிக்கியது?

புலிகளுடனான உள்நாட்டுப் போர், கோவிட் நோய் மற்றும் அதிக பணவீக்கம் நிறைந்த இலங்கை நாட்டில் பயணிக்கும் ஜனரஞ்சகத் தலைவர்களுக்கு நிதி அமைச்சரின் எச்சரிக்கை ஒரு பொருட்டில்லை. ஆனால் அவரது கணிப்பு 30 மாதங்களில் நிறைவேறியது.

2019 தேர்தலில் ராஜபக்சே வெற்றி பெற்ற பிறகு, ஆசியாவின் மிகவும் சக்தி வாய்ந்த குடும்ப ஆட்சி ஒன்றை மீண்டும் உருவாக்கினார். அவர் தனது முதல் அமைச்சரவை கூட்டத்தில் உடனடியாக வரி குறைப்பை நிறைவேற்றினார். பின்னர் அவர் தனது பலமான சகோதரரான மகிந்த ராஜபக்சவின் 10 ஆண்டுக்கால ஆட்சியிலிருந்த ஜனாதிபதி அதிகாரங்களை விரைவாக மீட்டெடுத்தார். அந்தக் குடும்பம் ஏறக்குறைய மூன்று பத்தாண்டுக் கால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.

மிகவும் பணிவுடன் ஆட்சி செய்யக் கற்றுக் கொள்வதற்குப் பதிலாக, 75% மக்களைக் கொண்ட சிங்கள பௌத்தர்களிடையே தேசியவாதத்தை எழுப்புவதோடு, தனது எதேச்சாதிகார குடும்பத்தின் முத்திரையை மீட்டெடுக்கவும் ராஜபக்சே விரைந்தார்.ஆனால் அந்த உத்தி விரைவில் தோல்வியடைந்தது. சமீபத்திய வாரங்களில், உணவு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு இலங்கையில் பணம் இல்லாமல் போனது. இது எரிபொருளுக்கான நீண்ட மக்கள் வரிசைகள் மற்றும் தினசரி 13 மணி நேர மின்வெட்டுக்கு வழிவகுத்தது. ஆத்திரமடைந்த குடிமக்கள் ரொட்டித் துண்டுகளைச் சூறையாடினர். மற்றும் மருந்துகளைச் சேகரிக்கச் சுகாதார அமைச்சகத்தைச் சூறையாடினர். கோத்தபய பதவி விலகக் கோரி பல வாரங்களாக கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் முகாமிட்டுள்ளனர்.

சீன கடன் வலையில் சிக்கிய பாகிஸ்தான், இலங்கை – எப்படி நடந்தது?

ஐஎம்எப், உலக வங்கி, சீனா மற்றும் பிற கடன் வழங்குபவர்களிடம் இருந்து அவசரக்கால நிதியை நாடும் வேலையை அதிபர் குடும்பம் செய்தது. அதே வேளையில், குடிமக்களுக்கான அடிப்படை பொருட்களை உறுதி செய்வதற்கான நடவடிக்கையில் ராஜபக்சே குடும்பம் முழு தோல்வி அடைந்தது. 1948ல் பிரிட்டிசாரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு முதல் முறையாக வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை நிறுத்தி விட்டது. வரிக் குறைப்புகளுக்குப் பிறகு உயர்ந்து இருந்த நாட்டின் பங்குச் சந்தை, இந்த ஆண்டு உலகின் மிக மோசமான செயல்திறன் கொண்டதாக மாறியது.

மேலும் 2019 தேர்தலுக்குப் பின்னர் அமல்படுத்திய இரண்டு முக்கிய கொள்கைகளிலிருந்து ராஜபக்சேகளும் பின்வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நிதியமைச்சர் அலி சப்ரி, இலங்கையின் நிதிநிலையை உயர்த்துவதற்கு மதிப்புக்கூட்டு வரியை அதிகரிக்க வேண்டும் என்றார். கோத்தபயவை ஜனாதிபதி பதவியிலிருந்தும், மகிந்தவை பிரதமராகப் பதவி நீக்கவும் எதிரிகள் முயல்வதால், ராஜபக்சேகள் தமது அதிகாரங்களைத் திரும்பப் பெறுவதில் முனைப்பாக உள்ளனர்.

“ராஜபக்சேகள் பின்வாங்குகிறார்கள், ஆனால் அவர்கள் சரணடையப் போகிறார்கள் என்று அர்த்தம் இல்லை” என்று ஒரு பத்திரிகை கட்டுரையாளரும், இலங்கை தேசிய அமைதி கழகத்தின் நிர்வாக இயக்குநருமான ஜெஹான் பெரேரா கூறினார். “தாங்கள் சென்றால், நாட்டிற்கு உள்ளேயும் வெளியையும் தாங்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று ராஜபக்சேகள் பயப்படுகிறார்கள். அவர்கள் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்கள்.”

கடந்த 20 ஆண்டுகளில் 12 ஆண்டுகளாக, ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டப் பகுதிகளைக் கட்டுப்படுத்தியுள்ளனர். அவர்களின் கண்காணிப்பின் கீழ், எதிர்க்கட்சி மற்றும் ஊடகங்களில் உள்ள விமர்சகர்கள் இலங்கையை “மென்மையான சர்வாதிகாரம்” என்று அழைத்தனர்.

மற்றும் ராஜபக்சேகளை “தி காட்பாதர்” திரைக்கதையை எழுதிய மரியோ புசோ கற்பனை செய்ததைப் போன்ற மாஃபியா பாத்திரங்கள் என்று வர்ணித்தனர். முன்னாள் பாதுகாப்புத் தலைவரான 72 வயதான கோத்தபய, தமிழ் பிரிவினைவாதிகளுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு கொடிய இறுதிப் போரை வழிநடத்தினார். இதன் மூலம் 2009 இல் போர்நிறுத்தத்திற்கு முன்னர் 1,00,000 மக்கள் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டார்கள்.

அவரது சகோதரர் 76 வயதான மகிந்த, குடும்பத்தின் அரசியல் மூளையாகத் திகழ்ந்தார். அவர் ஜனாதிபதியாகவும் இரண்டு முறை பிரதமராகவும் பணியாற்றினார். மற்ற இரண்டு உடன்பிறப்புகள், சமல் வயது 79, மற்றும் பசில் வயது 71, துறைமுகங்கள், விவசாயம் மற்றும் பணத்தை நிர்வகிப்பதற்கான முக்கிய இடங்களை ஆக்கிரமித்தனர். டஜன் கணக்கான ராஜபக்சே குடும்ப உறவினர்கள் உயர் பதவிகளை வகிக்கின்றனர்.

விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியிலிருந்து அண்மையில் ராஜினாமா செய்த ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ச – கடந்த நிர்வாகத்திலிருந்து மோசமான பொருளாதாரத்தை அரசாங்கம் பெற்றிருந்த போதிலும், அது சில முக்கிய கொள்கை பிழைகளைச் செய்ததாகவும், தொற்றுநோய் தாக்கிய போது விரைவாக முன்னோக்கிச் செல்லத் தவறியதாகவும் கூறினார். அரசாங்கம் வருவாயை இழந்து வருவதாலும், உள்ளூர் வணிகங்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் முதலீட்டை அறுவடை செய்யாததாலும் வரிக் குறைப்புக்கள் ஓராண்டுக்குப் பிறகு சரிசெய்யப்பட்டிருக்க வேண்டும் என்றார்.

“அமல்படுத்தும் போது அரசியல் கட்சி என்ற வகையில் நாங்கள் ஏற்றுக்கொள்ளாத சில தீர்மானங்கள் இருந்தன,” என்று தெரிவித்த நாமல் ராஜபக்சே, நிர்வாகம் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் இருந்திருக்க வேண்டும் என்றதோடு சவால்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்க நேரம் எடுத்திருக்க வேண்டும் என்றார். “ராஜபக்சே தலைமையிலான அரசாங்கம் ஆட்சியில் இருப்பதால், பொதுமக்கள் மீது குற்றம் சுமத்தவில்லை. அரசாங்கம் ஆட்சியில் உள்ளதால் அரசாங்கமே பொறுப்பு” என்றார்.

“தற்போதைய நிலைமை முற்றிலும் விநியோகச் சங்கிலி மற்றும் நிர்வாகத்தின் முறிவை அடிப்படையாகக் கொண்டது,” என்று அவர் மேலும் கூறினார். “ஜனாதிபதி உறுதியான முடிவுகளை எடுத்து நாட்டை ஆள வேண்டும். மேலும் நிறுவனங்களை மீட்டுச் சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும்,” என்றார்.

ராஜபக்ச சகோதரர்கள் : உகாண்டா நாட்டிற்கு விமானத்தில் எதைக் கடத்திச் சென்றார்கள்?

ராஜபக்ச ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே, நாடு நிதி நெருக்கடியிலிருந்தது. குடும்பத்தின் முதல் பதவிக் காலத்தில், நாட்டை தெற்காசிய நாடாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக, அதன் சொந்த மாவட்டமான ஹம்பாந்தோட்டை தீவின் தெற்கு கடற்கரையில் ஆழ்கடல் துறைமுகம் போன்ற திட்டங்களில் முதலீடு செய்வதற்காக அரசாங்கம் சீனாவிடம் இருந்து பெரிய கடன்களைப் பெற்றது. ஆனால் 2010 மற்றும் 2020க்கு இடையில் பல திட்டங்கள் நின்று போயின. மற்றும் வெளிநாட்டுக் கடன் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

அதற்கு மேல், 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாதத் தாக்குதல்களில் இருந்து நாடு இன்னும் தத்தளித்துக் கொண்டிருந்தது. இஸ்லாமிய அரசுடன் தொடர்புடைய தற்கொலைக் குண்டு பயங்கரவாதிகள், தேவாலயங்கள் மற்றும் சொகுசு ஹோட்டல்களில் இருந்த 250 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றனர். இந்த குண்டு வெடிப்பு தோற்றுவித்த அச்சமே கோத்தபயவிற்கு மக்கள் ஆதரவளிப்பதற்குக் காரணமாக இருந்தது.

“ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமைக்கு பிந்தைய சரிவிலிருந்து விடுபடுவதற்கான வழி, வரி குறைப்பு மற்றும் குறைந்த வட்டி விகிதங்கள் என்று எடுத்த முடிவு தவறு”, என்று அனுஷ்கா விஜேசின்ஹா ​​கூறினார். இவர் பொருளாதார நிபுணரும் அரசாங்கத்தின் சர்வதேச வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் முன்னாள் ஆலோசகரும் ஆவார்.

இதன் பிறகு முதலில் கோவிட் தொற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தியது. இது திடீரென்று சுற்றுலா மற்றும் பணம் அனுப்பும் வருவாயைக் குறைத்தது. கடன் தரும் நிறுவனங்கள் இலங்கையின் தர மதிப்பீட்டைக் குறைத்துள்ளன. அதற்காக அரசாங்கம் பணத்தை அதிகம் அச்சடித்தது. டிசம்பர் 2019 மற்றும் ஆகஸ்ட் 2021 க்கு இடையில் பண விநியோகத்தை 42% உயர்த்தியது. இதனால் ஆசியாவின் வேகமான பணவீக்கம் கொண்ட நாடாக இலங்கை மாறியது.

கடந்த ஏப்ரலில் இலங்கைக்கு இன்னொரு அதிர்ச்சி. ரசாயன உர இறக்குமதியை அரசாங்கம் திடீரென தடை செய்தது. பொதுவில், அதிகாரிகள் இந்த நடவடிக்கையை இயற்கை விவசாயத்தைத் தழுவி “உர மாஃபியாவை” எதிர்த்துப் போராடுவதாகக் கூறினர். உண்மையில், விஜேசின்ஹா ​​மற்றும் பிற பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, பலர் இந்த முடிவை டாலர்களைச் சேமிக்கும் முயற்சியாகப் பார்த்தனர். உரத்தீர்மானம் எடுக்கப்பட்ட நேரம் ஆளும் கட்சிக்குள் கருத்து வேறுபாடு இருந்தது என நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

உரத் தடையால் இலங்கையின் முழு விவசாயச் சங்கிலியும் அறுபட்டது. தொழிலாளர் சக்தியில் மூன்றில் ஒரு பங்காக இருந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8% குறைந்தது. நெல் அறுவடை தோல்வியடைந்தது. அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டது. மற்றும் பேரழிவிற்குள்ளான விவசாயிகளுக்கு ஆதரவாக விலையுயர்ந்த உணவு உதவித் திட்டத்தைத் தொடங்கியது. முக்கிய வருவாய் ஆதாரமான தேயிலையின் ஏற்றுமதி வருமானமும் வறண்டு போனது.

கொழும்பில் உள்ள பொருளாதாரக் கொள்கை ஆய்வுக் குழுவான அட்வகேட்டாவின் தலைமை இயக்க அதிகாரி தனநாத் பெர்னாண்டோ கூறுகையில், “பல நிபுணர்கள் முன் வந்து, இது உணவுப் பாதுகாப்பைப் பாதிக்கும் பேரழிவுக் கொள்கை என்று கூறினார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அரசாங்கம் அதன் முடிவில் உறுதியாக இருந்தது.”

கொள்கைத் தவறுகள், ஏழைகளுக்கு உணவு, மின்சாரம் மற்றும் மருந்து பற்றாக்குறைக்கு வழிவகுத்தது. மேலும் சீக்கிரமே கோபமடைந்த எதிர்ப்பாளர்கள் “வீட்டுக்கு போ” என்று தெருக்களில் அடிக்கத் தூண்டியது. மற்றும் “கோதா ஒரு பைத்தியக்காரன்!” என்ற முழக்கம் விண்ணைப் பிளந்தது. கூட்டணி உறுப்பினர்கள் விலகியதால், ராஜபக்சேகள் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழந்தனர். மேலும் இப்போது ராஜபக்சேகளை அதிகாரத்திலிருந்து அகற்ற எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றனர்.

தற்போதைய நிதி சிக்கல்கள் மற்றும் உடனே தேர்தலை நடத்துவது கடினமாக இருந்தாலும், ராஜபக்சேகள் தோல்வியடைவார்கள் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. வெரைட் ரிசர்ச் மூலம் ஜனவரியில் நடத்தப்பட்ட முதல் “மூட் ஆஃப் தி நேஷன்” கருத்துக் கணிப்பு அரசாங்கத்திற்கான ஆதரவு வெறும் 10% என்று காட்டியது.

ராஜபக்ச அரசாங்கம் “எங்கள் பொறுமை மற்றும் விடாமுயற்சியின் அளவை சோதிக்கிறது” என்று பல ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட 24 வயதான மாலிக் நசாஹிம் கூறினார். “அதுதான் எங்களை முன்னோக்கித் தள்ளுகிறது. நாங்கள் மாற்றத்தை விரும்புகிறோம், இப்போதும் அதை விரும்புகிறோம்.” என்கிறார். இது ஒரு சாதாரண இலங்கை குடிமகனின் கோபம். ராஜபக்சே குடும்பம் இலங்கை மக்கள் மீது நிகழ்த்திய சர்வாதிகார ஆட்சி முறையின் மீதான கோபம்.

நன்றி: விகடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *