MAGI யால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரிப்பு!
பிலிப்பைன்ஸை தாக்கிய மெகி( Megi) புயலைத் தொடர்ந்து கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன
குறிப்பாக லெய்டே உள்ளிட்ட பல மாகாணங்கள் நீரில் மூழ்கியதாகவும், கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கன மழையால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும், மண்சரிவுகளில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் மாயமான நிலையில், அவர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது