நாளை முதல் ATM கட்டணங்கள் அதிகரிப்பு!

அனைத்து தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளின் ஏடிஎம்களில் பணமெடுப்பதற்கான கட்டண உயர்வு நடைமுறை புத்தாண்டு முதல் அமலுக்கு வரவிருக்கிறது.

ஏடிஎம்களில் ஒவ்வொரு மாதத்துக்குமான பணமெடுப்பதற்கான அளவைத் தாண்டி, பணமெடுக்கும்போது, தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணம், நாளைமுதல் உயர்த்தப்படுகிறது.

வங்கி ஏடிஎம்களில் பணமெடுப்பதற்கான கட்டணங்களை உயர்த்திக்கொள்ள அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்ததையடுத்து, ஏடிஎம்களில் இலவசமாக பணமெடுப்பதற்கான அளவைத் தாண்டும்போது அதற்கான கட்டணம் 2022ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.

இது குறித்த தகவல்கள், அந்தந்த வங்கிகளிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு மாதமும், கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம்களிலிருந்து 5 முறை வரை இலவசமாக பணமெடுக்கலாம். அதற்கு அதிகமாக பணமெடுக்கும்போது, சேவைக் கட்டணமாக ரூ.20 வசூலிக்கப்படுகிறது. அதுபோல, ஒவ்வொரு மாதமும், மாநகராட்சிப் பகுதியில் வேறு வங்கியின் ஏடிஎம்களில் 3 முறையும், மாநகராட்சி அல்லாத பகுதிகள் என்றால் 5 முறையும் இலவசமாக பணமெடுக்கலாம். இதற்கு மேல் பணமெடுத்தால் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்தக் கட்டணங்கள், நாளைமுதல் உயர்த்த வங்கிகள் முடிவு செய்துள்ளன. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட ஏடிஎம் இலவச சேவைக்கு அதிகமாக பணமெடுக்கும் போது வசூலிக்கப்படும் சேவைக் கட்டணம் ரூ.21 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஜி.எஸ்.டி.யும் வசூலிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *