வடக்கு அரசு விட்ட தவறுகளை சபையில் பட்டியலிட்டார் தவராசா! – முதலமைச்சரின் செயற்பாடுகளையும் காரசாரமாக விமர்சித்தார்

கடந்த ஐந்து ஆண்டு காலப் பகுதியில் வடக்கு மாகாண சபை இழைத்த தவறுகள், இழந்த சந்தர்ப்பங்கள், வினைத்திறனற்ற செயற்பாடுகள், அதிகார வரம்புமீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் என்பவற்றை நேற்று நடந்த இறுதி அமர்வில் பட்டியலிட்டார் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா.

கடந்த ஆட்சிக் காலத்தில் முதலமைச்சர் மேற்கொண்ட சில செயற்பாடுகளையும் அவர் காரசாரமாக விமர்சித்தார்.

அவர் தனது உரையில் தெரிவித்தவை வருமாறு:-

“மாகாண சபை தேர்தல் முடிவுகள் வெளியாகிய மறுதினம் பத்திரிகையொன்று “மலர்ந்தது தமிழர் அரசு” என்ற தலைப்புடனான செய்தியினை வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தியை ஓர் சொற்றொடருக்குரிய விளக்கமாக நான் பார்க்கவில்லை. தமிழ் மக்கள் தமது ஏகோபித்த ஆதரவுடன் அமைக்கப்படும் மாகாண சபையானது “தமிழர் அரசு” எவ்வாறு தமிழ் மக்களுக்கு சேவையாற்றுமோ அவ்வாறான சேவையை மாகாண சபை வழங்குமென்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடன் இருந்தார்கள் என்பதனையே அச் செய்தி தலைப்பு வெளிப்படுத்தியது.

இச்சபையின் கன்னி அமர்விலே முதலமைச்சர் இறைவனுக்கு காணிக்கையினை செலுத்தித் தன்னை வழிநடத்தும் குருநாதரைப் போற்றி பணிந்து ஆற்றிய உரை தமிழ்மக்களின் அவ் எதிர்பார்ப்பினை மேலும் உறுதி செய்வதாகவும் நம்பிக்கையூட்டுவதாகவும் அமைந்திருந்தது. தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்பு தன்னைச் சில்லிட வைப்பதாக முதலமைச்சரே தனது உரையில் குறிப்பிட்டிருக்கின்றார்

முதலமைச்சரின் அன்றைய உரையில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக அமைந்த சில விடயங்களை அன்றைய கன்சாட்டிலிருந்து நான் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

“இருக்கும் பொறிமுறைகளையும் வழிமுறைகளையும் முடியுமானளவு அனுசரித்து முன்னேறத் திடசங்கற்பம் பூண்டுள்ளோம். வெளிப்பாட்டுத்தன்மை, பதிலளிக்கப்படவேண்டிய கடப்பாடு மற்றும் சட்டவாட்சிக் கொள்கை என்பவற்றின் அடிப்படையிலேயே வடமாகாண சபை இயங்கும். இலஞ்ச ஊழல்களுக்கு இடமளிக்கப்படமாட்டாது. அதேநேரத்தில் வடமாகாண சபை எப்பேற்பட்ட திட்டமிடப்பட்ட மனித பொருள் வளம் சம்பந்தமானதும் அபிவிருத்தி சம்பந்தமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டுமென்பதைனை அடையாளம் காணவேண்டிய அவசியத் தேவை எமக்குள்ளது. புலம்பெயர்ந்த உறவுகள் மனிதவளம், பொருள் வளம் சம்பந்தமாக எமக்கு அனுசரணைகள் ஈர்வர் என்பதில் எமக்கு நம்பிக்கையுண்டு. நிதியுதவிகளையும் இது சம்பந்தமாக எமக்கு வழங்கக் கோருகின்றோம். எம்மைப் பொறுத்தவரை நாம் நாட்டவிருக்கும் அத்திவாரக் கற்கள் நீதி, நல்லாட்சி, நம்பிக்கை, சமத்துவம், சுதந்திரம் என்பனவாகும். பாதுகாப்பு, கல்வி, வேலைவாய்ப்பு என்பவற்றை நோக்கிய நாம் அமைக்கப்போகும் பாதைகள் செல்லும். சர்வதேச நாடுகள் இரு தரப்பாரின் ஒத்துழைப்புடன் எமக்கு தொழில் சார் அறிவுரைகளை வழங்கி, நிதி வழங்கி மேற்கண்டவற்றை வெற்றிகரமாக நடத்தி முடிக்க பக்கபலமாகவும் பலமாகவும் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.”

எம்மக்களுக்கு நம்பிக்கையை கொடுக்கக் கூடிய விதத்தில் அன்று கூறியதில் ஏதாவது ஒன்றையேனும் கடந்த ஐந்து வருட காலத்தில் நடைமுறைப்படுத்தி இருக்கின்றோமா என்று இத் தருணத்தில் மீளாய்வு செய்வதில் தவறில்லையென்று கருதுகின்றேன்.

அதற்கு முன் ஒருவிடயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். அரசியல் அமைப்பு மாற்றம் தொடர்பான விடயங்களோ, இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் காணிதொடர்பான விடயங்களோ, காணாமற்போனோர் தொடர்பாக உண்மையைக் கண்டறியும் விடயங்களிலோ மாகாணசபை தலையிடவேண்டாம் என்று நான் கூறவில்லை. இவ்விடயங்களில் எமது கருத்தினைப் பதிவு செய்தததில் எந்தவிதமான தவறும் இல்லை. ஆனால், இவ்வாறான விடயங்களில் மட்டும் எமது நேரத்தை முழுமையாக செலவழித்துக் கொண்டு மாகாணசபையின் நிறைவேற்று செயற்பாடுகளினையும் மக்களுக்கான அபிவிருத்தியினையும் புறந்தள்ளுவது தான் எனது குற்றச்சாட்டு.

முதலமைச்சர் தனது உரையில் எங்களுக்கு அபிவிருத்தி முக்கியமல்ல என்று குறிப்பிட்டிருந்தார். கனவான் அரசியல் செய்பவர்களுக்கு அபிவிருத்தி முக்கியமற்றதாக இருக்கலாம். ஆனால், 30 வருடங்களுக்கு மேலாக யுத்தத்தினால் எல்லாவற்றையும் இழந்து தமது வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் மக்களை இன்னும் எவ்வளவு காலத்திற்கு இவ்வாறே இருக்கவேண்டுமென்று விரும்புகின்றீர்கள்.

முதலமைச்சர் நிதியத்தை ஆளுநர் அனுமதிக்காததால் தான் எம்மால் புலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகளைப் பெற்று அபிவிருத்தியை மேற்கொள்ள முடியவில்லையென முதலமைச்சர் தனதுரையில் குறிப்பிட்டார். ஆடத்தெரியாதவன் மேடை கோணல் என்று கூறியது போலத்தான் இது அமைகின்றது.

புலம்பெயர்ந்தவர்களின் நிதியை ஒருங்கிணைத்து அபிவிருத்தி வேலைகள் செய்வதாயின் எத்தனையோ நிதியங்களை ஆரம்பித்து அதனூடாகப் புலம்பெயர் பங்களிப்பை ஒன்றிணைத்து செயற்படுத்தியிருக்க முடியும். ஆளுநர் வெளிநாடுகளுக்கு சென்று புலம்பெயர்ந்தவர்களை முதலீடு செய்ய அழைப்பதாக முதலமைச்சர் கூறியிருந்தார். அவர் என்ன ஆளுநர் நிதியத்தை ஏற்படுத்திவிட்டா முதலிட வரும்படி கூறியிருந்தார். புலம்பெயர்ந்தவர்கள் முதலீடு செய்வதற்கு நிதியம் தேவையில்லை.

இனி நாம் விட்ட தவறுகள், இழந்த சந்தர்ப்பங்கள், வினைத்திறனற்ற செயற்பாடுகளை, அதிகார வரம்புமீறல் மற்றும் துஸ்பிரயோகங்கள் என்பனவற்றில் முக்கியமான சிலவற்றை நினைவூட்ட விரும்புகின்றேன்.

யாழ். கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றல் திட்டத்தினை நிராகரித்துவிட்டு மாற்று ஏற்பாடுகளை செய்வதாக இச்சபையில் அறிவித்திருந்தும், இதுவரை மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாமை கையிலிருந்ததையும் நழுவவிட்ட எமது கெட்டித்தனமாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதிக்கு பெயர் குறிப்பிட்டு ஒர் ஆலோசகரைச் சிபார்சு செய்ததன் விளைவாக எமக்குக் கிடைக்கவிருந்த நிதியை இழந்து யு.என்டி.பியுடன்; பாரிய முரண்பாட்டை தோற்றுவித்ததன் மூலம் தனிநபருக்காக ஒரு சர்வதேச ஸ்தாபனத்தையே பகைக்கின்ற நிலைக்கு நாம் திறமைசாலிகள் என்பதனை நிருபித்துள்ளோம்.

இந்தியப் பிரதமர் யாழ்.வந்திருந்தபோது எம்மக்களின் துயர்துடைக்க இந்தியாவின் அனுசரணையை வேண்டி நிற்பதற்குப் பதிலாக ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் பிரேமானந்த சுவாமி ஆச்சிரமத்தைச் சேர்ந்த கொலையாளிகள் நான்கு பேரின் விடுதலை தொடர்பாகக் கோரிக்கை விட்டது எம் மக்களின் பிரச்சினைகளில் எமக்கு உண்மையில் எவ்வளவு அக்கறையிருக்கின்றது என்பதனை தெளிவுபடுத்துகின்றது.

மாகாணத்துக்கு வேண்டிய நிதித்தேவைப்பாட்டினை அதன் நியாயப்பாட்டுகளுடன் மத்தியைக் கோராது இருந்துவிட்டு எமக்கு அரசு போதிய நிதி தருவதில்லையென்ற சபையில் உரக்கக் கூறி எமது இயலாத்தன்மையை மூடிமறைத்துள்ளோம்.

முதலீட்டு வாய்ப்புக்களை ஊக்குவிக்கும் நோக்குடனான பாரிய துறைசார் அபிவிருத்தித் திட்டங்கள் எதுவும், சுகாதார அமைச்சைத் தவிர, எந்த அமைச்சுக்களினாலோ அல்லது திணைக்களங்களினாலோ மேற்கொள்ளப்படாமை எமது இயலாத்தன்மைக்கு இன்னொரு எடுத்துக்காட்டு.

இதுவரை எம்மால் 15 நியதிச்சட்டங்களே முழுமையாக ஆக்கப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. நியதிச் சட்ட விடயத்தில் நொண்டிக் குதிரைக்குச் சறுக்கின சாட்டுப் போல் எமக்கு நியதிச் சட்டங்களை ஆக்குவதற்கு தனியான ஒர் சட்டவரைபு பிரிவினை அரசு ஏற்படுத்திக் கொடுக்கவில்லையெனக் கூறிக்கொண்டிருக்கலாம். ஆனால், வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் சட்டவரைபு நிபுணர்களைக் கொண்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் எமக்கு உதவ முன்வந்தும் அதனைத் தட்டிக்கழித்ததே எமது வரலாறு. சபைத் தலைவர் அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றார் என்ற ஒர் புதிய கட்டுக்கதையும் இப்போது அவிழ்த்து விடப்பட்டுள்ளது.

நியதிச் சட்டங்களுக்கு அமைவாக ஒழுங்கு விதிகள் சேவைப் பிரமாணக் குறிப்புகள் என்பன வரையப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவேண்டும். இதுவரை அது தொடர்பாக எதுவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமை எமது இயலாத்தன்மைக்கு இன்னொரு ஆதாரம்.

லண்டன் மாநகரில் உள்ள கிங்டன் உள்ளுராட்சி மன்றத்துக்கும் அதேபோல் கனடாவிலுள்ள மார்க்கம் நகராட்சிக்கும் இடையில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் எதுவும் செயற்படுத்தப்பட முடியாது என நான் முன்னரே இச்சபையில் சுட்டிக்காட்டியிருந்தேன். இன்று யாராவது அவ்வொப்பந்தங்களில் உள்ள விடயங்கள் ஏதாவது ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது என்று காட்ட முடியுமா?

ஒரு சிறிய நிர்வாகச் செயற்பாட்டைக் கூடச் செயற்படுத்த திறனற்றவர்களாகச் செயலாளர்களுக்கான சுற்றறிக்கையொன்றை முதலமைச்சரின் கையொப்பத்துடன் அனுப்பி இறுதியில் நீதிமன்றத்தில் அச்சுற்றறிக்கையினை வாபஸ் பெறுவதாக ஒப்புக் கொண்ட பெருமை எம்மைச் சாரும்.

அரசினால் வழங்கப்படும் மூலதன நிதியினைக் கூட முழுமையாகக் குறிப்பட்டுள்ள வருடத்திற்குள் செலவழிக்காமல் அந்நிதியை நிலையான வைப்புகளில் இட்டுவிட்டு நிதி முற்றாகக் குறிக்கப்பட்ட வேலைத்திட்டங்களுக்காக செலவழிக்கப்பட்டுவிட்டது என ஆரம்ப காலங்களில் சபைக்கும் எமக்கு வாக்களித்த மக்களுக்கும் பொய்யான தகவல்களை கூறியதைக் கண்டித்து நான் கணக்காளர் நாயகத்திற்குக் கூட அறிவித்திருந்தேன். என்னுடைய அன்றைய செயற்பாடு தான் தொடர்ச்சியாக அவ்வாறான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வழிசமைத்தது.

எமது அசட்டைத்தனமான செயற்பாடுகளாலும், சில சேவைகளுக்கான பிரமாணக் குறிப்புக்கள் இன்னும் தயார் செய்யப்படமையினாலும் 3,000க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் இருக்கின்றன.

அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கையில் சிபார்சு செய்யப்பட்ட சட்டபூர்வமற்ற மற்றும் ஊழல் நடவடிக்கைகள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் தேவையென குறிப்பிடப்பட்டிருந்தும் இதுவரை அவ்வாறான மேலதிக விசாரணைகளோ நடவடிக்கைகளோ ஏன் மேற்கொள்ளப்படவில்லை என்பது மாகாண சபை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை மேலும் இழக்கச் செய்துள்ளது.

வருடத்திற்கு வெறும் 2 கோடி ருபாவை எமது மக்களின் பயன்பாட்டிற்கு பெற ஒப்பந்தமிட்டுப் பளையின் காற்றலை அமைப்பதற்கு யூலிப்பவர், பீற்றாபவர் என்ற நிறுவனங்களுக்கு அவர்கள் வருடம் ஒன்றுக்கு ஏறத்தாழ 140 கோடி இலாபத்தைப் பெறுவதற்கு காணியை வழங்குவதற்கு ஒப்புதலை வழங்கியதன் மூலம் எம்மக்களுக்குச் செய்த மகா தவறுக்கு மாகாணசபை என்ன பிரயத்தனம் மேற்கொள்ளப் போகின்றது.

இராணுவத்தினரின் பாவனைக்கு தான் காணியை வழங்கவில்லையென முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார். அப்படியெனில் ஏன் பளையின் காற்றாலை அமைப்பதற்குக் காணியை வழங்கினீர்கள்?
எம்மால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் எத்தனை பாரிய குற்றச்சாட்டுகள் இருந்தும் அது தொடாபர்பாக ஏதாவது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?

சுன்னாகம் நிலத்தடி நீர் தொடர்பான விடயம், மூங்கில் நடுகைத் திட்டத்தினை நிராகரித்தமை, அனுமதி பெறத்தேவையற்ற விடயங்களுக்கெல்லாம் அனுமதி பெறவேண்டுமென ஓரு அமைச்சர் வலியுறுத்தியமை, அதிகார துஸ்பிரயோகங்கள், நிதிமோசடி குற்றச்சாட்டுக்கள் இவை தொடர்பாக தொடர்நடவடிக்கை எடுக்காமை பனங்காட்டு நரியை பாதுகாக்கும் நடவடிக்கைகளாகவே பார்க்கவேண்டியுள்ளது.

கடந்த நான்கு மாதங்களாக ஒரு அமைச்சரவையைக் கூட கூட்ட முடியாத நிலைமைக்கு நம்மை நாமே இட்டு சென்றது எமது வினைத்திறனற்ற செயற்பாட்டின் உச்சக் கட்டமென்றே கருதவேண்டியுள்ளது.

இத்தருணத்தில் நாங்கள் நிறைவேற்றிய பிரேரணைகள் பற்றியும் குறிப்பிட வேண்டும். இதுவரை 444 பிரேரணைகள் நாங்கள் நிறைவேற்றியிருக்கின்றோம். இவற்றில் ஒரு சிலவற்றைத் தவிர பெரும்பான்மையானவை எதுவித பிரயோசனமற்றவை. எமது சபை நேரத்தை வீணாக்கியதே நாம் கண்டவை. இருந்தும் சபையின் ஐக்கிய செயற்பாட்டிற்கு குந்தகமாகச் செயற்படக்கூடாது என்பதானாலேயே அப்பிரேரணைகளை நான் எதிர்த்து நிற்கவில்லை. மாகாண சபையின் சில பிரேரணைகள் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சாசனம் வரை தாக்கத்தை கொடுத்திருக்கின்றது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

தொடர்ச்சியாக எமது மாகாண சபை வினைதிறனற்றே செயற்பட்டிருக்கின்றது என்று கூறுகின்றேன் என்று கருதவேண்டாம். அரசமைப்பு மாற்றத்துக்கான மாகாணசபையின் வரைவு மற்றும் முதலமைச்சரை பிரதிநிதித்துவப்படுத்தி நான் அரசமைப்பு வழிகாட்டல் குழுவின் முன்சென்று எம் மக்களுக்கு வேண்டிய அரசமைப்பு மாற்றம் தொடர்பாக பிரஸ்தாபித்தது மட்டுமல்ல அரசமைப்பு மாற்றத்துற்கான மாகாண சபையின் வரைவினை முதலமைச்சருடன் சென்று சபாநாயகரிடம் கொடுப்பதிலும் எனது பங்கை வகித்துள்ளேன். ஆதலினால் எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்காகவோ, அல்லது அரசியல் காழ்ப்புணர்விலேயோ நான் விடயங்களை எதிர்க்கவில்லை மாறாக எமது பலவீனங்கள் எமது வினைதிறனற்ற செயற்பாடுகள் தவறுகள் இழந்த சந்தர்ப்பங்களை சுட்டிக்காட்டுவதன் மூலம் இந்த மாகாணசபையை வினைதிறனுள்ளதாகச் செயற்பட வைப்பதற்கு முனைந்துள்ளேன் என்பதனைத் தான் என்னால் கூறி வைக்க முடியும்.

எமது தோல்விக்கு முக்கிய காரணங்களில் ஒன்று ஒவ்வொரு விடயத்தினையும் திறந்த கண்ணோட்டத்துடன் அணுகாமல் அரசியலாக்க முனைந்ததன் விளைவு என்றே கருதக்கூடியதாக இருக்கின்றது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *