காலி அணியை வீழ்த்தி யாழ் அணி சம்பியனானது!
2021 லங்கா பிரீமியர் லீக்கின் இறுதிப் போட்டியில், காலி கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி, இரண்டாவது முறையாகவும் யாழ்ப்பாண கிங்ஸ் அணி சம்பியனானது.
ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில், ‘பரம எதிரி’ என வர்ணிக்கப்படும் காலி கிளாடியேட்டர்ஸ் அணியை 23 ஓட்டங்களால் வீழ்த்தியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ் கிங்ஸ் அணி, காலி கிளாடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சைஅடித்து நொறுக்கி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களைக் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்க பெர்னாண்டோ 41 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 63 ஓட்டங்கள் எடுத்தார். ஏற்கனவே, அரையிறுதியில் தம்புள்ளை ஜெயன்ட்ஸுக்கு எதிராக அற்புதமான சதத்தை அடித்தவர், நேற்றும் மிரட்டல் ஃபோர்மை தொடர்ந்தார்.
ரொம் கோஹ்லர்-காட்மோர் 41 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 57, ரஹ்மனுல்லா 18 பந்துகளில் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.
யாழ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் இழந்து 201 ஓட்டங்களை குவித்தது.
பந்து வீச்சில் மொஹமட் அமீர், நுவான் துசார, சமித் பட்டேல் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.
பதிலளித்து ஆடிய காலி கிளாடியேட்டர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் தனுஷ்க குணதிலகா காட்டடி அடித்து, 21 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
அவர் களத்திலிருந்த வரை, காலி வெற்றிபெறும் என்ற நிலையிருந்தது. காலி அணி 9 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் எடுத்து பாதுகாப்பான நிலைமையில்தான் இருந்தது. எனினும், நடுவரிசையில் மற்ற முன்னணி வீரர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் விதமாக ஆடவில்லை.
குணதிலகவுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ககுசல் மென்டில் 28 பந்துகளில் 39 ஓட்டங்கள் எடுத்தார். குணதிலக ஆட்டமிழந்த அடுத்த பந்திலேயே ரன் அவுட்டானார்.