புகையிரத பயணச்சீட்டு இரத்து மக்கள் இலவசமாக பயணம்!
நேற்று (23) நள்ளிரவு முதல் புகையிரத ஊழியர்கள் பயணச்சீட்டு வழங்கும் பணியினை இடைநிறுத்தி தொழிற்சங்க போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
புகையிரத சேவையாளர்களின் பதவி உயர்வு, புகையிரதங்களை அதிகரித்தல், பயணிகளுக்கு வசதிகள் பெற்றுக்கொடுத்தல், சேவை மூப்பின் அடிப்படையில் பதவி உயர்வு உள்ளிட்ட 20 இற்கு மேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் நடைபெற்ற போதிலும் புகையிரத பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இன்று (24) புகையிரதத்தில் இலவசமாக பயணிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக பயணிகள் தெரிவித்தனர்.
மலையகத்தில் அதிகமான புகையிரத நிலையங்களில் இன்று வருகை தந்த புகையிரத பயணிகளுக்கு புகையிரத பயணச்சீட்டு வழங்கப்படாத போதிலும் மேல் வட்டவளை,ரொசல்ல உள்ளிட்ட ஒரு சில புகையிரத நிலையங்களில் மாத்திரம் பயணச்சீட்டு வழங்கப்பட்டதாக தெரிவித்தனர்.
ஒரு சிலர் இதனை நத்தார் பரிசாக கருதுவதாகவும் தெரிவிக்கின்றனர். குறித்த பயணச்சீட்டுப் போராட்டம் இன்றும், நாளையும் நடைபெறுவதாகவும் இதற்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாகவும் புகையிரத ஊழியர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் பயணச்சீட்டு இன்றி பயணஞ் செய்தால் மேலும் மேலும் நாடு பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படும் என இன்னும் ஒரு சிலர் தெரிவித்தனர். எது எவ்வாறான போதிலும் முன்கூட்டியே பயணச்சீட்டுக்களை பதிவு செய்தவர்கள் வழமை போல் தங்களது பயணங்களை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது