இலங்கையில் 10 ஆயிரம் ரூபா நாணயத்தாள்?
இணையத்தளங்களில் தற்போது வைரலாகி வரும் பத்தாயிரம் ரூபா நாணயத்தாள் தொடர்பில் வெளியாகும் செய்திகள் அடிப்படையற்றது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால்(Ajith Nivard Cabraal) தெரிவித்துள்ளார்.
பண வீக்கம் அதிகரித்து வரும் நிலையில் 10 ஆயிரம் நாணய தாளை அச்சிட தீர்மானித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய நிலையில் நாணயம் அச்சிடுவது குறித்து எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை, நிதியமைச்சும் அவ்வாறு ஆலோசனை வழங்கவுமில்லை.
வெளிநாட்டு கையிறுப்பினை அதிகரித்துக் கொள்வதற்காக உரிய திட்டங்கள் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளன. இம்மாதத்திற்குள் வெளிநாட்டு கையிருப்பினை 3 மில்லியன் டொலர்களினால் அதிகரிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
டொலர் நெருக்கடி காரணமாக துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எதிர்வரும் மாதம் எரிபொருள்,எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத அளவிற்கு நாட்டில் நிதி நெருக்கடி நிலை ஏற்படும் என அரசியல் மட்டத்தில் குறிப்பிடப்படும் விடயங்கள் முழுமையாக கண்டிக்கத்தக்கது.
எக்காரணிகளுக்காகவும் அத்தியாவசிய பொருள் இறக்குமதியில் பாதிப்பு ஏற்படாது என குறிப்பிட்டுள்ளார்.