கொரோனா தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!
“நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனை சாதாரண விடயமாக கருதிவிடமுடியாது. எனவே, மக்கள் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டால் எதிர்காலத்தில் பாரதூரமான நிலைமை உருவாகும்.” – இவ்வாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் காணமுடிகின்றது. இவ்வாறு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதை சாதாரண விடயமாகக் கருதிவிட முடியாது.
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, கைகளைக் கழுவுதல் உட்பட சுகாதார நடைமுறைகளை முறையாகப் பின்பற்றாமையே இதற்குப் பிரதான காரணமாகும். எனவே, சுகாதார நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறு கோருகின்றோம்.
அத்துடன், நாட்டில் தற்போது பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. வணிக மற்றும் பொருளாதார நடைமுறைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுகாதார நடைமுறைகளை முறையாகப் பின்பற்றாவிட்டால் எதிர்காலத்தில் பாரதூரமான நிலைமை உருவாகக்கூடும்.” – என்றார்.