T20 உலகக் கிண்ண 2022 கிரிக்கெட் போட்டியிலும் இலங்கை அணி தகுதிகாண் சுற்றில்!

அவுஸ்திரேலியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போடடியிலும் இலங்கை முதல் சுற்றிலிருந்து ( தகுதிகாண் சுற்று) விளையாட நேரிட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது.சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை 9ஆம் இடத்திலுள்ளதாலேயே அடுத்த வருட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலும் இந்த வருடத்தைப் போன்று முதல் சுற்றிலிருந்து விளையாட நேரிட்டுள்ளது.

ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 7ஆவது இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் முதல் சுற்றில் 3 போட்டிகளிலும் வெற்றியீட்டிய பின்னர் சுப்பர் 12 சுற்றில் பங்களாதேஷையும் மேற்கிந்தியத் தீவுகளையும் இலங்கை வெற்றிகொண்டிருந்தது.ஆனால், தரவரிசையில் தொடர்ந்தும் 9ஆம் இடத்திலேயே இருக்கின்றது.

சுப்பர் 12 சுற்றில் பங்களாதேஷ் ஒரு வெற்றியையும் ஈட்டாத போதிலும் தரவரிசையில் தொடர்ந்து 7ஆம் இடத்தில் இருப்பதுடன் ஆப்பானிஸ்தான் 8ஆம் இடத்தில் உள்ளது.இரண்டு தடவைகள் உலக சம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் தரவரிசயில் 10ஆம் இடத்தில் இருப்பதால் அடுத்த வருட இருபது 20 உலகக் கிண்ணத்தில் அந்த அணியும் முதல் சுற்றிலிருந்து விளையாடவுள்ளது.

இதேவேளை, தரவரிசையில் முதல் 6 இடங்களிலுள்ள இங்கிலாந்து, பாகிஸ்தான், இந்தியா, நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா ஆகியவற்றுடன் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகியனவும் சுப்பர் 12 சுற்றில் நேரடியாக விளையாடவுள்ளன.

இம்முறை முதல் சுற்றிலிருந்து சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேறிய ஸ்கொட்லாந்து, நமிபியா ஆகியன அடுத்த வருடம் முதல் சுற்றில் நேரடியாக விளையாட தகுதிபெற்றுள்ளன.

முதல் சுற்றில் விளையாடவுள்ள மற்றைய 4 நாடுகள் பிராந்திய தகுதிகாண் சுற்றின் மூலம் முதல் சுற்றுக்கு தெரிவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *