58 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தையை சந்தித்த மகள் பேஸ்புக்கில் நடந்த பாசப் போராட்டம்!
இங்கிலாந்தின் லிங்கன்ஷையரைச் சேர்ந்த 59 வயதான ஜூலி லண்ட் 58 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தந்தையுடன் மீண்டும் இணைந்துள்ளார். இந்த இணைப்பை சாத்தியப்படுத்தியுள்ளது ஃபேஸ்புக் என்றால் பலர் ஆச்சரியப்படுவார்கள். ஆம், ஃபேஸ்புக் மூலம் தான் தந்தை மகளின் இணைப்பு 58 ஆண்டுகளுக்கு பிறகு சாத்தியமாகியுள்ளது.
இந்த ஜூலியின் தந்தை பிரையன் ரோத்தரி. ஜூலி ஒருவயதாக இருக்கும்போதே அவரின் தாயும் தந்தை பிரையன் ரோத்தரியும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். அதன்பிறகு, அவரின் தாய் வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளார். அதேநேரம், ஜூலியும் வளர்ப்பு தாயிடம் ஒப்படைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. என்றாலும், அதற்கு முன்னதாக பிரையன் ரோத்தரி வாரம்ஒருமுறை ஜூலியை பார்த்துவிடுவார். ஆனால் வளர்ப்பு தாயிடம் ஒப்படைக்கப்பட்டு பிறகு அவரால் ஜூலியை பார்க்க முடியவில்லை.
இதனால் தந்தை மகள் பிரிந்துள்ளனர். இந்த நிலையில் தான் ஒருகட்டத்தில் ஜூலிக்கு தந்தை குறித்த உண்மை தெரியவர, அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார். இடையில் அவரின் தாய் இந்த ஆண்டு உயிரிழந்துவிட தந்தையை தேடும் பணி சிரமமாகியுள்ளது. இதன்பிறகு, தான் ஜூலி உள்ளூர் ஃபேஸ்புக் குழுவில் தனது தந்தையைக் கண்டுபிடிக்க, சிறுவயது புகைப்படத்தை பதிவிட்டு பெரிய குறிப்பு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
அக்டோபர் 5 அன்று, அவர் தனது முதல் பதிவில், 1963ல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார். படத்தில், தள்ளு நாற்காலியில் ஒரு குழந்தையுடன் மூன்று பேர் இருக்கிறார்கள். அது ஜூலி தான். இந்தப் படத்துடன்,
“இந்தப் படத்தில் உள்ள குடும்பத்தை யாராவது அடையாளம் காண முடிகிறதா?” என்று குறிப்புடன் பதிவு வெளியிட்டார்.
இந்தப் பதிவுக்கு பிறகு அவரின் தந்தை கண்டுபிடிக்கப்பட்டார். ஜூலி தான் இருக்கும் இடத்தில் இருந்து ஒருமணிநேரம் பயணம் செய்யும் தூரத்தில் தான் அவரின் தந்தை இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து வந்துள்ளார்.
லிங்கன்ஷயர் பகுதியில் ஜூலி இருக்கிறார் என்றால் அவரின் தந்தை பிரையன், மேற்கு யார்க்ஷயரில் உள்ள டியூஸ்பரி எனும் இடத்தில் வசித்து வருகிறார். ஃபேஸ்புக் நண்பர்கள் உதவியுடன் தந்தையை கண்டுபிடித்தவர் 58 ஆண்டுகளுக்கு அவரை சில நாட்கள் முன் சந்தித்துள்ளார்.
தந்தையை கண்டுபிடிக்க உதவிய பேஸ்புக் குழுவுக்கு நன்றி தெரிவித்த ஜூலி,
”நான் இழந்த எனது குடும்பத்தைக் கண்டுபிடிக்க உதவிய மக்களுக்கு நன்றி. இந்தப் போராட்டத்தில் எனக்குத் தெரிந்ததெல்லாம் என் தந்தையின் பெயர் பிரையன் ரோத்தரி. சிறுவயதில் அவர் தோர்ன் அவென்யூ, தோர்ன்ஹில்லில் வாழ்ந்தார் என்பது மட்டுமே. இதை வைத்து அவரை தேடித்தந்தவர்களுக்கு மிகப்பெரிய நன்றி,” என்றவர், தந்தையை சந்தித்த தருணம் குறித்து பேசியுள்ளார்.”