கோலியை தலைவர் பதவியில் இருந்து விலக வலியுறுத்திய ரவி சாஸ்திரி!
டி20 இந்திய அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்ததன் பின்னணியில் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இருப்பதும் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்தும் கோலியை விலக சொல்லி அவர் வலியுறுத்தியதும் தெரியவந்துள்ளது.
சமீபகாலமாக விராட் கோலி பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். எனவே பேட்டிங்கில் முழு கவனம் செலுத்துமாறு பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆலோசனை வழங்கியுள்ளார், அதாவது டி20 மட்டுமல்ல ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் கேப்டன்சியை உதறுமாறு ரவி சாஸ்திரி கோலிக்கு ஆலோசனை வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உடனே ஐபிஎல் கேப்டன்சி சுமையில்லையா என்ற கேள்விகள் எழ இந்த ஐபிஎல் 2021 சீசனோடு அதையும் உதறுகிறேன் என்று அறிவித்தார் விராட் கோலி. ஜனவரி 2017-ல் தோனி விலகியது முதல் விராட் கோலி இந்திய அணியின் அனைத்து வடிவ கேப்டன்சி பொறுப்பை ஏற்றார்.
3 வடிவங்களிலும் சராசரி 50 க்கும் மேல் வைத்திருக்கும் ஒரே வீரர் விராட் கோலிதான். டெஸ்ட் போட்டியில்தான் அவர் கடந்த 2 ஆண்டுகளாக சதம் எடுக்கவில்லை, தற்போது இங்கிலாந்தில் சொதப்பி விட்டார், எனவே அவர் பிரச்சனை டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங்தான்.
இதற்கு ஒருநாள், டி20 கேப்டன்சி எந்த விதத்தில் காரணம் என்று தெரியவில்லை. அணியில் ரோகித் சர்மா லாபி கடுமையாக, வலுவாக உள்ளது என்பது இதிலிருந்து தெரிகிறது.
எப்படியிருந்தாலும் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் விலகுகிறேன் என கோலி அறிவித்தாலும், ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக நீடிக்கவே செய்கிறார்.
ஒருநாள் கேப்டன்சி தொடர்பில் 2023 உலகக்கோப்பைக்குள் அணித்தேர்வுக்குழுதான் முடிவெடுக்க வேண்டும் என்று தகவல் வெளியாகியுள்ளது.