தீபாவளிக்குத் திரைக்கு வருகிறது ‘மாநாடு’

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’.

இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், அஞ்சனா கீர்த்தி, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், கருணாகரன், உதயா, டேனி, மனோஜ் K பாரதி, பிரேம்ஜி, மஹத் ராகவேந்திரா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவைக் கையாள, சண்டைப் பயிற்சி அமைத்துள்ளார் ஸ்டண்ட் சில்வா.

கலையை உமேஷ் குமார் கவனித்துள்ளார். சுப்பிரமணியம் தயாரிப்பு மேற்பார்வை செய்துள்ளார்.

அரசியல் பின்னணியில் மிகப் பிரமாண்டமான பொருட்செலவில் தயாராகியுள்ள இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

இந்த நிலையில் மாநாடு படம் வரும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டமாக வரும் நவ-4ஆம் தேதி வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

தீபாவளிக்கு மாநாடு படம் வெளியாகும் என்ற அறிவிப்பு திரையுலகிலும் ரசிகர்களிடமும் ஒருசேர ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் ஓரளவு குறைந்துள்ள நிலையில் தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்தச் சூழ்நிலையில் மக்களை தியேட்டர்களுக்கு குடும்பம் குடும்பமாக வரவழைக்க இதுபோன்ற முன்னணி நடிகர்களின் படங்களால் மட்டும் தான் சாத்தியம் ஆகும்.

அதனால் சிலம்பரசன் TR நடித்துள்ள மாநாடு படம் வெளியாவது தீபாவளி பண்டிகையை இன்னும் களைகட்ட செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *