நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய இலங்கையர் குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
நியூசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில், திடீரென ஒருவர் கத்தியால் மக்களைத் தாக்கத் தொடங்கினார். அவர் தாக்கியதில் குறைந்தது ஆறு பேர் காயமடைந்துள்ளார்கள். அவர்களில் மூவர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
பொலிசார் சுட்டதில் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், சுட்டுக்கொல்லப்பட்ட அந்த நபர் ஒரு இலங்கையர் என்றும், தனது தீவிரவாத கருத்துக்களுக்காக ஏற்கனவே பொலிசாருக்கும் அரசியல்வாதிகளுக்கும் அறிமுகமானவர் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
நீதிமன்ற தடை உள்ளதால் பெயர் குறிப்பிடப்படாமல் வெறுமனே ‘S’ என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த நபர், 2011ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து நியூசிலாந்து வந்துள்ளார்.
இருமுறை கத்திகளை வாங்கியதாலும், ஐ எஸ் தொடர்பான வீடியோக்களை வைத்திருந்ததாலும், தீவிரவாதக் கருத்துக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாலும் தீவிரவாத கண்காணிப்பு பட்டியலில் பொலிசார் அவரை சேர்த்த நிலையில், 2016 முதல் சாதாரண உடை அணிந்த பொலிசார் பொலிசார் அவரை தீவிரமாக கண்காணித்துவந்துள்ளார்கள்.
அவர் வெளியிட்ட கருத்துக்களுக்காக பொலிசார் அவரை அதிகாரப்பூர்வமாக எச்சரித்தும் தொடர்ந்து அவர் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட வண்ணம் இருந்திருக்கிறார். அவற்றில் ஒன்றில், ‘நான் ஒருநாள் என் நாட்டுக்குத் திரும்பிச் செல்வேன், என் நாட்டில் அவுஸ்திரேலியர்களைக் கண்டுபிடித்து, நான் உங்கள் நாட்டில் இருக்கும்போது என்னுடன் மோதினால் என்ன ஆகும் என்பதை அவர்களுக்கு காட்டுவேன்’ என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒருமுறை மசூதி ஒன்றிற்கு சென்ற அவர் அங்கிருந்த ஒருவரிடம், தான் சிரியா சென்று ஐ எஸ் அமைப்பில் சேரும் எண்ணத்தில் இருப்பதாக தெரிவித்ததாக ஒரு தகவல் வெளியாக, அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் செல்ல விமான டிக்கெட் வாங்கிய நிலையில், ஆக்லாந்து சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஓராண்டு சிறைவாசம் முடிந்த நிலையில், 2018ஆம் ஆண்டு அவரை கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவர் சிறையிலிருந்து விடுதலையானதற்கு மறுநாள், அவர் ஒரு கத்தியை வாங்க, அவரைப் பின் தொடர்ந்த பொலிசார் மீண்டும் அவரைக் கைது செய்துள்ளார்கள். அத்துடன், கடவுள் நம்பிக்கையில்லாதவர்களைக் கொல்வது எப்படி என்று இணையத்தில் அவர் தேடியதும் தெரியவந்துள்ளது.
அவர் தாக்குதல் நடத்தாத வரையில் அவரை தீவிரவாத சட்டத்தின்கீழ் விசாரிக்க முடியாது என்பதால், அவர் ஐ எஸ் பிரச்சாரத்தை வைத்திருந்ததற்காக மட்டும் விசாரிக்கப்பட்டுள்ளார்.
விசாரணையின்போது, நீங்கள் ஒரு கத்தியைக் குறித்து கவலைப்படுகிறீர்கள், நான் சொல்லுகிறேன், நான் 10 கத்திகள் வாங்குவேன், அது என் உரிமை என்று நீதிபதியிடம் கூறினாராம் அவர்.