உலகின் முதன் மொழி தோன்றி இரண்டு இலட்சம் ஆண்டுகள்!
உலகின் முதன் மொழி தோன்றி இரண்டு இலட்சம் ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்கிறார் அமெரிக்க மொழி அறிஞர் சுவாடேசு. உலகின் தாய்மொழிக்கான வாய்ப்பு தமிழுக்கு உள்ளது என்றும் உறுதி கூறுகிறார். பாவாணர் போன்றோரும் இதனை அறுதியிடுகின்றனர். பலரது கள ஆய்வும் இதனையே உறுதி செய்கிறது. இதனால்தான் நூல்களில் தமிழ்ச் சொற்களின் வழித்தோன்றலாக உலகின் பெரிய 400 மொழிகளில் ஒப்புமையைக் காட்டமுடிகிறது.
தமிழின் இத்தகைய வீச்சிற்கும், வீழாத தன்மைக்கும் காரணங்கள் யாவை?
இன்ன எழுத்தில்தான் தொடங்க வேண்டும், இன்ன எழுத்தில்தான் சொற்கள் முடிவடைய வேண்டும். உச்சரிக்கக் கடினமான சொற்கள் இருத்தல் கூடாது. என்றெல்லாம் நமது முன்னோர்கள் வரையறை செய்து வைத்திருந்தனர். மேலும் மொழி என்பது பாமரர் சொத்து என்பதை ஒருசட்டமாகவே வைத்திருந்தனர். சிறுவர் எளிதில் கற்றுணர மொழிச்சட்டம் அல்லது இலக்கணம் ஒரு தடையாக இருத்தல் ஆகாதென்றுதிட்டமிட்டிருந்தனர். எனவே மரபு மீறலை ஒரு மரபாகவும் வைத்திருந்தனர்.
தமிழ் நாகரிகம் என்ற வரையறை ஒரு பரந்து பட்ட பொருளில்தான் இயங்குமே தவிர, ஒரு சிறு எல்லைக்குள் நிலைபெறவில்லை.
கன்னித்தமிழ் எங்ஙனம் அவ்வப்போது தோன்றிய இறுக்கமான சூழ்நிலைகளையும் எதிர்ப்பான சூழ்நிலைகளையும் தகர்த்தெறிந்து மீண்டும் மீண்டும் தன்னை இளமைப்படுத்திக் கொண்டு வருகிறதோ அவ்வாறே தமிழ் நாகரிகம் என்பதுவும் அழிக்கப்பட முடியாத ஒன்று என்று தன்னை அடிக்கடி நிலைநாட்டி வந்திருக்கிறது.