புதிய கொரோனா வைரஸின் அறிகுறிகள்!

கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் தோன்றி உலகெங்கிலும் பரவியுள்ள கொரோனா பலரது வாழ்க்கையையே மாற்றியுள்ளது. இந்த கொடிய கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்து இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படாத நிலையில், சமீபத்தில் இங்கிலாந்தின் சில பகுதிகளில் கொரோனாவின் புதிய வகை ஒன்று பரவி வருவதாக கூறப்படுகிறது. உருமாற்றம் பெற்ற இந்த கொரோனா வைரஸின் அறிகுறிகளை இங்கிலாந்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்தில் உருமாற்றம் பெற்ற கொரோனா பரவ ஆரம்பித்ததும், அங்கு குழப்பமும், பதற்றமும் அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் பல கட்ட சோதனைகளைத் தாண்டி மனித சோதனைகளில் இருக்கும் நிலையில், கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று பரவி வருவது மக்களின் நம்பிக்கையை கெடுக்கும் வகையில் இருக்கிறது என்றே கூற வேண்டும்.

பொதுவாக ஒரு வைரஸ் அதன் கூறுகளில் மாற்றம் பெற்று உருமாற்றம் அடைவது என்பது சாதாரணமான ஒன்று என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இதுவரை 17 முறை தனது மரபியல் கூறுகளில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இங்கிலாந்தில் சமீபத்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வீரியமிக்கதுடன், ஏற்கனவே இருக்கும் கொரோவை விட 70 சதவீதம் வேகமாக பரவக்கூடியதாக முதல் கட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. “VUI 202012/01” என பெயரிடப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ், தனது “ஸ்பைக்” புரதத்தில் ஒரு மரபணு மாற்றத்தை கொண்டுள்ளது. இது தான் மக்கள் மத்தியில் வேகமாக பரவுவதற்கு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கொரோனாவின் மூன்று பொதுவான அறிகுறிகளான காய்ச்சல், வறட்டு இருமல் மற்றும் சுவை மற்றும் வாசனை இழப்பு தவிர, மற்ற 7 அறிகுறிகளும் கொரோனா வைரஸின் புதிய திரிபுடன் தொடர்புடையவையாக உள்ளன. அந்த அறிகுறிகள் பின்வருமாறு..

சோர்வு
பசியின்மை
தலை வலி
வயிற்றுப்போக்கு
மனகுழப்பம்
தசை வலி
சரும அரிப்பு அல்லது வெடிப்பு
கிங் கல்லூரி ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, “உங்களுக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால், அசால்ட்டாக விடாமல், நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்வதோடு, விரைவில் பரிசோனையையும் செய்து கொள்ள வேண்டியதும் அவசியம்.”

இதுவரை கண்காணித்தவரை, புதிய கோவிட் திரிபு முந்தைய வைரஸ் விட 70 சதவீதம் அதிக தொற்றுநோயாக இருப்பதால், இது மிகவும் ஆபத்தானதாக அதிகாரிகள் நம்புகின்றனர். மேலும் பழைய கொரோனாவை காட்டிலும் புதிய கொரோனா ஒருவரை தாக்குவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
அதோடு புதிய கொரோனா வைரஸ் முந்தைய விகாரங்களை விட மிகவும் வேகமாகவும், கடுமையாகவும் நோயெதிர்ப்பு மண்டலத்தை தாக்கக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 4 அடுக்கு லாக்டவுனை அந்நாட்டு அரசு தெரிவித்துள்ள நிலையில், பிற நாடுகளிலும் இந்த வைரஸ் பரவாமல் இருப்பதற்கு மற்ற நாடுகள் தங்களின் எல்லைகளை மூடியுள்ளன.

இருப்பினும், தனிப்பட்ட ஒருவர் தொற்றின் அறிகுறிகள் லேசாக தென்பட்டாலும், தங்களைத் தாங்களே தனிப்படுத்திக் கொள்வதால், மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கலாம்.

அதோடு கொரோனாவை சாதாணமாக எடுத்துக் கொள்ளாமல், அரசு பரிந்துரைத்த வழிக்காட்டுதல்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அனைத்து நேரங்களிலும் பின்பற்ற வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *