இலங்கை வீரர் குட்டி மலிங்கவின் பந்துவீச்சை எதிர்கொள்வது கடினமானது தோனி புகழாரம்!

ஐபிஎல் தொடரின் 68வது லீக் போட்டி மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி பவர்ப்ளேயில் அதிரடியாக ஆடி 72 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் கடைசிவரை சொதப்பியதால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக மொயின் அலி 93 ரன்கள் எடுத்தார். பின்னர் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர் பட்லர் 2 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

ஆனால் மற்றொரு துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் சிறப்பாக ஆடி 44 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார்.கேப்டன் சஞ்சு சாம்சன் (15), தேவ்தத் படிக்கல் (3), ஹெட்மயர் (6) போன்ற முன்னணி வீரர்கள் விரைவாக விக்கெட்டை இழந்து ஏமாற்றம் அளித்தனர். இந்நிலையில் ஐந்தாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் மிக அருமையாக ஆடினார். அவர் 23 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்ததுடன் இறுதிவரை அவுட் ஆகாமல் அணியை வெற்றிபெற செய்தார். 19.4 ஓவரில் இலக்கை எட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெற்றி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:- இந்த சீசனில் லீக் ஆட்டங்கள் அனைத்திலும் எங்கள் அணி தொடர்ந்து நன்றாக விளையாடி வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது. சென்னை அணியுடனான இந்த ஆட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அனைவருமே வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வோடு விளையாடினோம். இந்த வெற்றிக்கு நாங்கள் தகுதியானவர்கள் என்பதை நான் உணர்கிறேன். மைதானம் பேட் செய்வதற்கு நன்றாக இருந்தது. அதனால் அவர்கள் வேகமாக ரன்களை குவித்தனர். மொயின்அலி போன்ற வீரரை தடுப்பது கடினம். அதனால் ரன்கள் போனால் போகட்டும் என்று நினைத்தேன்.

ஆனால் எங்கள் பந்துவீச்சாளர்கள் விரைவிலேயே பலமாக மீண்டு வந்து, பவர் பிளேவுக்கு பின்னர் வெறும் 75 ரன்களுக்குள் அவர்களை கட்டுப்படுத்தினர். பவர்பிளே முடிந்ததும், மெக்காயை நான் கொண்டு வந்தேன். அவரும் மிகவும் தன்னம்பிக்கையாக இருந்தார். அவர் கிரிக்கெட் வீரராக நன்றாக முதிர்ச்சி பெற்றிருப்பதோடு, பந்துவீச்சிலும் பல மாற்றங்களை கொண்டு வந்தார். அஸ்வின் ஒரு சிறந்த வேலையை மிகவும் திறம்பட செய்துள்ளார். அவர் மிக சிறப்பாக ஆடினார். மேலும் எங்கள் அணிக்கு ஒரு சிறந்த ஆல் ரவுண்டராக அவர் கிடைத்துள்ளார். வலைப் பயிற்சியின் போது அவர் நீண்ட நேரம் பேட்டிங் செய்தார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சென்னை கேப்டன் டோனி கூறுகையில்,

“இளம் பந்துவீச்சாளர்கள் தங்களது தவறுகளை திருத்திக்கொண்டு அடுத்த தொடரில்  சிறப்பாக செயல்படுவார்கள் என நம்புகிறேன். முகேஷ் சவுத்ரி நிறைய விஷயங்களை  தற்போது தான் கற்று வருகிறார். அவர் தன்னை முன்னேற்றி கொள்வதில் அதிகம்  முனைப்பு காட்டுகிறார். இளம் வீரர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்.  எங்களது `குட்டி’ மலிங்காவின் (பதிரானா) பந்துவீச்சை எதிர்கொள்வது லேசான  காரியம் இல்லை. நிச்சயமாக அடுத்த தொடரிலும் பதிரானா சென்னை அணிக்காகவே  விளையாடுவார். அவர் தவறுகளை திருத்திக்கொள்வதுடன், தனது பந்துவீச்சில்  மேலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தி, அடுத்த தொடரில் சிறப்பாக செயல்படுவார் என  நம்புகிறேன்” என்றார்.

ஊக்கத்துடன் விளையாடினேன்: ஆட்ட நாயகன் அஸ்வின் பேட்டி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிக்கு காரணமான ஆட்ட நாயகன் ஆர்.அஸ்வின் கூறுகையில், “இந்த வெற்றியின் மூலம் மில்லியன் டாலர்கள் பெற்றது போன்ற உணர்வு உள்ளது. இந்த நாள் எங்களுக்கு மிக சிறப்பான நாளாகும். இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பே அணியில் எனது பங்கை நிர்வாகத்தினர் விளக்கினர். இதனால் நான் பயிற்சியில் அதிக கவனம் செலுத்தினேன். என்னை பவர்பிளேயில் விளையாடும்படி கேட்டுக் கொண்டனர். அது ஒன்றும் அது மரண விளிம்பு அல்லவே… (சிரிக்கிறார்). 20 ஓவர் மேட்ச்சில், நாம் விக்கெட்டுகளை துரத்த முடியாது. பேட்ஸ்மேன்கள் தான் ரிஸ்க் எடுக்கவேண்டும்.

சில சமயங்களில் அவர்கள் அந்த ரிஸ்க்கை எடுக்காவிட்டால், மறுமுனையில் பவுலிங் மூலம் நான் ரிஸ்க் எடுக்க வேண்டும். நான் இந்த விளையாட்டை நன்கு புரிந்துகொண்டு, ஊக்கத்துடன் விளையாடினேன். நான் அனைத்து மேட்ச்சுகளிலும் இதுபோல் விளையாடுவேன் என்று கூற முடியாது. நான் எனது உச்சபட்ச விளையாட்டை எந்த அணிக்கு விளையாடுகிறேனோ, அந்த அணியின் உரிமையாளருக்கு வழங்குவேன். இது மரியாதையின் அடையாளம். நாங்கள் பிளே ஆப் சுற்றுக்கு வந்ததால் வெற்றியின் கொண்டாட்டத்தில் உள்ளோம்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *