இலங்கையில் கொரோனா தொற்று குறித்த முழு விபரம்!
நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூன்று உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 14 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
அத்துடன், கொழும்பு 09 பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவர் தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
மேலும், பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய பெண்ணொருவரும் பானதுறை ஆதார வைத்தியசாலையில் இருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த மூவருக்கும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் அடிப்படையில் குறித்த உயிரிழப்புகள் கொரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 285 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 234 பேர் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் 51 பேர் சிறைச்சாலைகளில் தொற்றுக்குள்ளானவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பேலியகொடை, திவுலப்பிட்டிய மற்றும் சிறைச்சாலை கொரோனா கொத்தணிகளில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 785 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், நேற்று மாத்திரம் 611 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 732 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சைபெற்று வந்த மேலும் 785 குணமடைந்து நேற்று வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்துகுணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 652 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா தொற்றினால் 160 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 499 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான 8 ஆயிரத்து 923 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக 10 இலட்சத்து 42 ஆயிரத்து 318 பி.சி.ஆர். பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.