வீடு வீடாக மீன் விற்பனை செய்த குடும்பத்திற்கு கொரோனா!
நேற்றைய தினம் covid-19 தொற்றுக்குள்ளான அம்பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த தாயொருவர், அவரின் குழந்தைகள் மூவர் மற்றும் அவரின் சகோதரி ஒருவர் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண்ணின் கணவர் இதற்கு முன்னர் தொற்றுக்கு உள்ளாகி இருந்தார்.
அவர் பேலியகொடை மீன் சந்தையில் மீன்களை பெற்று வந்த நிலையில் அது தொடர்பில் சுகாதார பிரிவுக்கு அறிவிக்காமல் பிரதேசத்தில் தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில் அம்பலாங்கொடை மீன்பிடி துறைமுகத்தை அண்மித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை ஊடாக குறித்த நபருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
பின்னர் குறித்த நபரின் மாமாவுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதற்கு முன்னர் அவர் திலகபுர மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களுக்கு சிறிய ரக லொறி ஒன்றில் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றில் சென்று மீன் விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண்ணும் வீடுகளுக்குச் சென்று மீன் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
குறித்த பெண்ணிடம் மீன்களை பெற்றுக்கொண்டவர்கள் உடனடியாக சுகாதார பிரிவுக்கு தெரியப்படுத்துமாறு அவர் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போதைய நிலையில் குறித்த பிரதேசம் உயர் அவதானம் கொண்ட பிரதேசமாக காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.