தனக்கு எதிராக தவறான வதந்திகளைப் பரப்புவதாக ஏ.ஆர்.ரஹ்மான் குற்றச்சாட்டு!
பாலிவுட்டில் தன்னிடம் கருத்து வேறுபாடு கொண்ட ஒரு கும்பல் தவறான வதந்திகளைப் பரப்புவதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தில் தொடங்கியது உலகப் புகழ்பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பயணம். அப்போது முதல் தமிழ், தெலுங்கு, பாலிவுட், ஹாலிவுட் எனப் பல மொழிகளில் பல படங்களுக்கு தன் தனித்துவமான இசையைக் கொடுத்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்தியாவில் இசை மற்றும் திரைத்துறையில் வழங்கப்பட்டும் பல்வேறு விருதுகள் மட்டுமல்லாது இந்தியாவிலிருந்து சென்று ஆஸ்கார் வென்ற கலைஞர் என்ற பெருமை கொண்டவர்.
இந்நிலையில் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் தயாரான`தில் பெச்சாரா’ படம் நேற்று ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதற்கும் ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் குறித்து தனியார் ரேடியோ சேனலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ரஹ்மான், பாலிவுட்டில் தன்னோடு கருத்து வேறுபாடு கொண்ட ஒரு கும்பல் தன்னைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகப் பேசியுள்ளார். சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மறைவுக்குப் பிறகு பாலிவுட்டில் இருக்கும் வாரிசுகள் தொடர்பான சர்ச்சை பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதனுடன் தற்போது ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்தும் சேர்ந்துள்ளதால் பாலிவுட் சினிமா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன