கொரோனா வைரஸ் பதற்றத்தால் உருவாகும் மன அழுத்தம்
கொரோனா பதற்றத்தால் உருவாகும் மன அழுத்தம்
உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரை
உலகம் முழுவதும் மக்களிடம் கொரோனாவின் பாதிப்பு மிகப்பெரிய பாதிப்பை மக்கள் மனங்களில் உண்டாக்கி இருக்கிறது. மனஅழுத்தம், கவலை, பீதி, குழப்பமும் ஏற்பட்டிருக்கின்றன.
சமூகத்தில் நிலவும் தேவையற்ற பதற்றத்தைத் தணித்து முன்னெச்சரிக்கையாக மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது.
மன அழுத்தம் நீங்க, உலக சுகாதார நிறுவனம் சில குறிப்புகளை உலக மக்களுக்காக வெளியிட்டுள்ளது. அதனைப் பின்பற்றினாலே மன அழுத்தம் பறந்துபோய்விடும்.
நாம் வீண் கவலைகளில் மூழ்கி பீதியடைய வேண்டியதில்லை. கொரோனா ஒன்றும் செய்துவிடாது என்று இளைஞர்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது என உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அறிவுறுத்தியுள்ளார்.
இதோ அந்தக் குறிப்புகள்…
செல்போன்கள் மற்றும் சமூகவலைதளங்கள் வழியான டிஜிட்டல் உரையாடலைத் தவிர்த்து குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுங்கள். மற்றவர்களுடன் சாட்டிங் செய்து பயத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்.
ஏற்கனவே மனரீதியான பிரச்சினைகளுக்காக மருந்துகள் சாப்பிட்டு வந்தால், கூடுதல் கவனம் செலுத்துங்கள். தினமும் முறையான உணவையும் தூக்கத்தையும் கடைப்பிடியுங்கள். உடலுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும்போது மனஅழுத்தம் குறையும்.
அரசு மற்றும் சுகாதார நிறுவனங்களின் வழிமுறைகளையும் விழிப்புணர்வையும் தவறாமல் பின்பற்றுங்கள். போலியான புரளிகளையும் சமூக வலைதளங்களில் காணக்கிடைக்கும் வதந்திகளையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மதுவாலும் புகைப்பிடிப்பதாலும் மன அழுத்தம் குறையாது. அதற்காக எந்த முயற்சியும் செய்யாதீர்கள்.
நீங்கள் நீண்டகாலமாக செய்யாமல் விட்டுவிட்ட உங்களுக்கு விருப்பமான பொழுது போக்குகளை மீண்டும் செய்யத் தொடங்குங்கள் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுரைகளை வழங்கியுள்ளது