சீனாவில் கொரோனா வைரஸால் 1இலட்சத்திற்கு மேற்பட்டோர் பலி 28 இலட்சம் பேர் பாதிப்பு?
பீஜிங்: சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகானில் கடந்த மாதம் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இந்த வைரசால் பாதிக்கப்படுவோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். நாளுக்கு நாள் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது தொடர்பாக அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தினந்ேதாறும் பலி மற்றும் பாதிக்கப்பட்டோர் குறித்த விவரங்களை வெளியிட்டு வருகின்றது. ஆனால் அரசு சுகாதார ஆணையத்தின் இந்த அறிக்கையில் உண்மை தன்மை இல்லையோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கொரோனா பாதித்த 563 பேர் மட்டுமே தற்போது வரை இறந்துள்ளதாக அறிக்கைகள் கூறும் நிலையில், கடந்த மாத இறுதி வரை சுமார் ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக வௌிநாட்டு உளவு அமைப்புகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
மேலும் 28 லட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், இவர்கள் உடலில் பல்வேறு உறுப்புகள் செயலிழப்பு காரணமாக இறந்துள்ளதாகவும் அவர்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்களிடம் இருந்து இத்தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக இணையதளத்தில் செய்திகள் வெளியாகி உள்ளது. சீன மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் திணறி வருகின்றன. அங்கு பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்கான உபகரணங்கள் கூட போதுமான அளவுக்கு இல்லை என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் பிளாஸ்டிக் துணியால் சுற்றப்பட்டு நேரடியாக மின்மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு எரித்து சாம்பலாக்கப்படுகின்றன என்றும், இறுதிச் சடங்கு அல்லது அடக்கம் செய்யப்படுவது போன்ற நடைமுறைகள் எதுவும் கிடையாது என்று உளவு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமின்றி 11 நகரங்களை சீன அரசு தனிமைப்படுத்தியுள்ளது. மேலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது எனவும் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுபோன்று சுமார் 6 கோடி மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அரசினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
640 இந்தியர்கள் வந்தனர்
மத்திய வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று அளித்த பேட்டியில், ‘‘சீன அரசின் உதவியோடு, கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளான அந்நாட்டின் ஹூபெய் மாகாணத்தில் இருந்து 640 இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டனர். மேலும், 10 பேர் இந்தியா வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், மருத்துவ பரிசோதனையை முடிக்க முடியவில்லை. அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். அவர்கள் நாடு திரும்புவதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்,’ என்றார்.
திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனரிடம் அடைக்கலம் தேடிய சீன பயணி
கேரளாவுக்கு நேற்று முன்தினம் சீனாவை சேர்ந்த ஜிஷோ யு ஷாவோ(25) என்பவர் சுற்றிப்பார்க்க வந்தார். மும்பையில் இருந்து விமானத்தில் திருவனந்தபுரம் வந்த அவர் இரவு தங்க ஓட்டல்களில் அறை கேட்டார். ஆனால் எங்கும் அறை கொடுக்கவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர் திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் பல்ராம்குமார் உபாத்தியாவை சந்தித்து விவரத்தை கூறினார். இதையடுத்து அவரை மருத்துவ பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்தது. ஆனாலும் ஓட்டல்களில் அவருக்கு அறை கொடுக்காததால் மருத்துவமனை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபோல் அங்கு மேலும் 2 வெளிநாட்டினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க மருந்து
வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்காவின் கிளீட் சயின்சஸ் என்ற மருந்து நிறுவனம் தயாரித்த மருந்தை பயன்படுத்த சீனா மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக வுகான் வைராலஜி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ராணுவ ஆய்வகத்துடன் இணைந்து அமெரிக்காவின் ரெம்டெஸிவிர் மருந்துக்கு காப்புரிமை கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு இது சோதனை முறையில் வழங்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது.
மூடி மறைக்கப்படுகிறதா?
லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டு 563 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 73 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும், புதிதாக 3,694 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 31 மாகாணங்களில் மொத்தம் 28,018 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்னர். நேற்று முன்தினம் இறந்த 73 பேரில் 70 பேர் வைரஸ் தாக்குதல் பரவ தொடங்கிய ஹூபெய் மாகாணத்தை சேர்ந்தவர்கள். டியன்ஜின், ஹெய்லாங்ஜியாங் மற்றும் குய்சு மாகாணங்களில் தலா ஒருவர் வைரஸ் பாதிப்பு காரணமாக இறந்துள்ளனர். நேற்று முன்தினம் 5,328 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இவர்களில் 2,987 பேர் ஹூபெய் மாகாணத்தை சேர்ந்தவர்கள். 640 பேர் மிகவும் மோசமான நிலையிலும், 3,859 பேர் தொடரந்–்து மோசமான நிலையிலும் காணப்படுகின்றனர் என கூறப்பட்டுள்ளது.
மிளகாய் ஏற்றுமதியாளர்கள் பாதிப்பு காங். எம்பி வலியுறுத்தல்
மாநிலங்களவையில் நேற்று நடந்த கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் எம்பி ராமச்சந்திர ராவ் பேசுகையில், ‘‘சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக இந்தியாவில் இருந்து விவசாயிகள் மிளகாய் ஏற்றுமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் தேஜா வகை மிளகாயானது 5000 கோடிக்கு ஏற்றுமதி ஆகிறது. இதில் 60% சீனாவுக்கு செல்கிறது. தெலங்கானா, ஆந்திரபிரதேசம் மாநிலங்கள் ஏற்றுமதியில் முக்கிய பங்குவகிக்கின்றன. பெரும்பாலும் தேஜா வகை மிளகாய் தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஏற்றுமதி தடைபட்டுள்ளது. இதனால், துரதிஷ்டவசமாக இந்திய மிளகாய் ஏற்றுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, அதனை குறைந்த விலைக்கு விற்கும் கட்டாயத்துக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் நஷ்டமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு அரசு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கவும், அவற்றை கொள்முதல் செய்யவும் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்றார்.
…